வெள்ளி, 12 ஆகஸ்ட், 2016

கண்டியில் ‘தேசியத் தமிழ் மொழி நாள்’!




தலைப்பு-கண்டியில்தமிழ்மொழிநாள் : thalaippu_ kandiyilthamizhmozhinaal

கண்டியில் ‘தேசியத் தமிழ் மொழி நாள்’!
 தேசியத் தமிழ் மொழி நாள் விழாவைக் கண்டி மாநகரில் கொண்டாடுவதற்குக் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. நாடளாவிய அளவில் காணப்படும் தமிழ் மொழி மூலமான கல்விக்கூடங்களுக்கிடையில் தமிழ் மொழி தொடர்பான போட்டிகள் வலய மாகாண அளவிலும் தேசிய அளவிலும் நடைபெற்று வருகின்றன. இந்தப் போட்டிகளில் தேசிய அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவும் தேசியத் தமிழ் மொழி நாளும் கண்டி மாநகரில் வெகு கோலாகலமாகக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
தேசியத் தமிழ் மொழி நாள் விழா அத்தோபர் மாதம் இரண்டாம் கிழமையில் (வாரத்தில்) கொண்டாடுவதற்கான எல்லா ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஏற்பாடுகள் குறித்து, கண்டித் தமிழ் வணிகச் சங்கத்தினருக்கும், கல்வி அமைச்சர் வே.இராதாகிருட்டிணனுக்கும், கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமார் ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று கண்டியில் நடைபெற்றது. இதில் கண்டி மாநகரின் வணிகப் புள்ளிகளும் கலந்து கொண்டனர்.
இந்தக் கலந்துரையாடலின்படி, அத்தோபர் மாதம் நடைபெறும் தேசியத் தமிழ் மொழி நாளில், காலையில் மாபெரும் பண்பாட்டு ஊர்வலம் ஒன்று கண்டி நகரில் நடைபெற உள்ளது. இதில் எல்லா மாகாணங்களையும் சேர்ந்த மாணவர்களின் பண்பாட்டு நிகழ்வுகள் நடைபெறுவதுடன் அந்தந்தப் பகுதிகளுக்குரிய பண்பாட்டு நிகழ்வுகளும் நடைபெற உள்ளன. தொடர்ந்து, வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பும் கலை நிகழ்வுகளும் நடைபெற உள்ளன. அதை அடுத்து, உலகளாவிய கலைஞர்கள், அறிஞர்கள் ஆகியோரின் சொற்பொழிவுகளும் நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. இந்நிகழ்வுகளில் இந்தியா உட்பட உலக நாடுகளின் அரசியலாளர்கள், கலைஞர்கள், அறிஞர்கள் கலந்து கொள்ள உள்ளனர். குறிப்பாக, வடக்கு – கிழக்குப் பகுதித் தமிழறிஞர்கள், வட மாகாண முதலமைச்சர், தலைமையமைச்சர் (பிரதமர்), குடியரசுத்தலைவர், அமைச்சர்கள் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இலங்கை வரலாற்றில் கல்வி அமைச்சினால் நடாத்தப்பட்டு வரும் தேசியத் தமிழ் மொழி நாள் நிகழ்வில் இதுவே முதல் தடவையாக தேசிய அளவில் கொண்டாடப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
  கல்வி அமைச்சில் தற்பொழுது கல்வி அமைச்சுப் பதவியை வே.இராதாகிருட்டிணன் அவர்களுக்கு வழங்கியதன் காரணத்தினாலேயே இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழி நாளை ஒட்டி உலகளாவிய அளவில் பல்வேறுபட்ட நிகழ்வுகள் நடைபெற்று வரும் வேளையில் இலங்கையில் தேசியத் தமிழ் நாள் விழா கல்விக்கூட மட்டத்தில் கொண்டாடப்படுவது வரவேற்கத்தக்க ஒன்றாகும்.
தரவு:பெயர்-பா.திருஞானம் : peyar_paa.thirugnanam02பெயர்-இ.பு.ஞானப்பிரகாசன் : peyar_gnanaprakasan_peyar

மீனாட்சி அம்மை வெற்றிக் கிண்ணத்தை வென்றது கொட்டக்கலை மகளிர் அணி




மீனாட்சி வெற்றிக்கிண்ணம்01 : winner_kottakalaiani01

மீனாட்சி அம்மை வெற்றிக் கிண்ணத்தை வென்றது

கொட்டக்கலை மகளிர் அணி!

  ‘அடையாளம்’ எனும் தொண்டு நிறுவனமும் ‘தாமரைக்குளம்’ பதிவர் சங்கமும் இணைந்து நானுஓயா நாவலர் கல்லூரியில் நடாத்திய மகளிருக்கான மட்டைப்பந்து (கிரிக்கெட்) போட்டியின் மீனாட்சி அம்மை வெற்றிக் கிண்ணத்தைக் கொட்டக்கலை உ.தொ.ம.(g.t.c.) மகளிர் அணி வெற்றி கொண்டது. நானுஓயா தாச்மகால் அணி இரண்டாம் இடத்தையும் நுவரெலியா மிசுரோ உயர்மன்னர்(சூப்பர் கிங்சு) அணி மூன்றாம் இடத்தையும் அடைந்தன.
 முதலாம் இடம்பிடித்த அணிக்கு வெற்றிக் கிண்ணமும் 10,000 உரூபாய்ப் பணப் பரிசும் அளிக்கப்பட்டன. இரண்டாம் இடம் பிடித்த அணிக்கு வெற்றிக் கிண்ணமும் 7,500 உரூபாய்ப் பணப் பரிசும் வழங்கப்பட்டன. மூன்றாம் இடத்தைப் பெற்ற அணிக்கு வெற்றிக் கிண்ணமும் 5,000 உரூபாய்ப் பணப் பரிசும் தரப்பட்டன.
  மேலும், இந்தப் பரிசளிப்பு நிகழ்வில் மூத்த எழுத்தாளர் மு.சிவலிங்கம் எழுதி வெளியிட்ட ‘பஞ்சம் பிழைக்க வந்த சீமை’ என்ற நூல் இளைஞர்கள் மத்தியில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டதுடன் ‘அடையாளம்’ அமைப்பின் செயலாளர் பழனி விசயகுமார் மூலம் நானுஓயா நாவலர் கல்லூரி நூலகத்திற்கு ஒரு தொகை நூல்கள் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டன. கல்லுரியின் துணைத்தலைவர் நூல்களைப் பெற்றுக் கொண்டார்.
  மகளிருக்கான மட்டைப்பந்தாட்டப் போட்டியில் தொடராட்டத் தலைவியாக உ.தொ.ம.(g.t.c.) அணியின் வீராங்கனை கீதா தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு வெற்றிக் கிண்ணமும் 3,000 உரூபாய்ப் பணப் பரிசும் அளிக்கப்பட்டன. இறுதிப் போட்டியின் தலைவியாக உ.தொ.ம. (g.t.c.) அணியின் வீராங்கனை சுபா தேர்வு செய்யப்பட்டார்.
 இம்முறை போட்டியில் கொட்டக்கலை உ.தொ.ம. (g.t.c.) அணி, கொட்டக்கலை ரி.ரி.சி அணி, நானுஓயா தாச்மகால் அணி, தெசுபோர்டு சிவப்பு உரோசா அணி, கேம்பிரி மேற்பிரிவு கூகுள் அணி, நுவரெலியா மிசுரோ உயர்மன்னர்(சூப்பர் கிங்சு) அணி, உயர்மேலை (கிரேட்வெசுடன்) அ, ஆ அணியினர், செம்மொழி மன்றம் அணி, புளியாவத்தை அணி ஆகியன கலந்து கொண்டன. அனைத்து அணிகளுக்கும் நினைவுக் கிண்ணமும் ‘பஞ்சம் பிழைக்க வந்த சீமை’ நூலும் பரிசாக வழங்கப்பட்டன.
மீனாட்சி வெற்றிக்கிண்ணம்02 ; winner_kottakalaiani02
பெயர்-பா.திருஞானம் : peyar_paa.thirugnanam02

கற்பித்தலில் புதுமை! – தமிழ்நாடு அரசின் ஆவணப் படம் வெளியீடு




மாணிக்கவாசகம்பள்ளி-காணொளி02 - முகப்பு0;chokkalingam_video_padam மாணிக்கவாசகம்பள்ளி-காணொளி- முகப்பு01 :chokkalingam_video_padam02

கற்பித்தலில் புதுமை! – தமிழ்நாடு அரசின் ஆவணப் படம் வெளியீடு

 சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தொடக்கக்கல்வி முதல் மேல்நிலைக் கல்வி வரையான அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஏறக்குறைய 1320 பள்ளிகளில் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி ஒன்று மட்டுமே முதற்கட்டமாகத் தேர்வாகி, சிவகங்கை மாவட்ட அளவில் தமிழ்நாடு அரசின் சார்பாக உலக அளவில் முதன் முதலாக இதற்கெனக் காணொலி ஆவணப் படம் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
  தேவகோட்டை, பெருந்தலைவர்(சேர்மன்) மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியின் கற்பித்தல் நிகழ்வுகளைப் பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ.சொக்கலிங்கம் விரிவாக எடுத்து சொல்லும் ‘பட்டறிவு (அனுபவம்) புதுமை’ என்கிற தலைப்பிலான காணொலிப் பதிவினை உயூடியூபு (YOUTUBE) வாயிலாக https://www.youtube.com/watch?v=DHSKxC40YaE&list=PLrEkyHXS85XtjFLXUNdWGu3lHnNvFzPPk&index=4 மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி – பயிற்சி நிறுவனம் (மா.க.ஆ.ப.நி – SCERT) வெளியிட்டுள்ளது. பள்ளியில் நடைபெற்றுள்ள பல்வேறு நிகழ்வுகளை மிக அழகாக எடுத்துச் சொன்னதுடன் உலக அளவில் தமிழ்நாடு அரசு – அரசு உதவி பெறும் பள்ளிகளின் நிகழ்வுகளைக் கொண்டு சென்றுள்ள மா.க.ஆ.ப.நி-யில் உள்ள அனைவருக்கும் நன்றிகள் பல!
  தமிழக அரசு – அரசு உதவி பெறும் பள்ளிகளில் கற்றல் கற்பித்தலில் புதுமைகள் செய்யும் ஆசிரியர்களைத் தேர்வு செய்து ஆவணப்படமாக எடுத்து வெளி உலகுக்கு ஆசிரியர்களின் பன்முகத் திறமைகளைக் காட்டும் நோக்கில் இந்தப் புதிய முயற்சியை மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி – பயிற்சி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது!
குறிப்பிட்ட காணொலியைக் கீழ்வரும் இணைப்பு வாயிலாகக் காணலாம்:
இதனைப் பார்த்தபோது மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
  தமிழ்நாடு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி – பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகளின்படி கற்றல், கற்பித்தல், புதுமை புனைதல், கல்வி சார் கணினி வளங்கள் சேகரிக்க இணையத்தளப் பக்கத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதிலும் தொடக்கக்கல்வி முதல் மேல்நிலைக் கல்வி வரை உள்ள ஏறத்தாழ  ஐந்நூறாயிரம் ஆசிரியர்களில் முதற்கட்டமாக 75 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 75 ஆசிரியர்களில் சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை, பெருந்தலைவர் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ.சொக்கலிங்கம் அவர்களும் ஒருவர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தொடக்கக்கல்வி முதல் மேல்நிலைக் கல்வி வரையான அரசு மற்றும் அரசு உதவி பெறும்  ஏறக்குறைய 1320 பள்ளிகளில் இப்பள்ளி ஒன்று மட்டுமே முதற்கட்டமாகத் தேர்வாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
 புதுமை புனைதல் என்னும் பொதுத் தலைப்பின் கீழ்க் காணொலி ஆவணம்  உருவாக்கும் பொருட்டு இயக்குநரின் ஆணைப்படி மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி – பயிற்சி நிறுவனக் குழுவைச் சேர்ந்த படப்பிடிப்புக் குழுவினர் இப்பள்ளிக்கு வருகை புரிந்தனர். பட இயக்குநர் செரோம், ஒளிப்பதிவாளர்கள் அந்தோணி, சான் ஆகியோர் பள்ளித் தலைமை ஆசிரியரிடமும் மாணவ-மாணவியரிடமும் காட்சிகளை விரிவாக எடுத்துக் கூறினர். பிறகு ஆவணப்படம் எடுக்கப்பட்டது.
பட இயக்குநர் பேச்சு:             
  இது குறித்துப் பேசிய இந்த ஆவணப் பட இயக்குநர் செரோம், “தமிழ்நாடு அரசின் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி – பயிற்சி நிறுவன இயக்குநரின் ஆணைப்படி, சிவகங்கை மாவட்டத்தின் தேவகோட்டை, பெருந்தலைவர் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளியை ‘பட்டறிவு (அனுபவம்) புதுமை’ என்கிற தலைப்பில் ஆவணப்படமாக எடுக்க இங்கு வந்துள்ளோம். தமிழ்நாடு அரசு – அரசு உதவி பெறும் பள்ளிகளில் கற்றல், கற்பித்தலில் புதுமைகள் செய்யும் ஆசிரியர்களைத் தேர்வு செய்து ஆவணப்படமாக எடுத்து வெளி உலகுக்கு ஆசிரியர்களின் பன்முகத் திறமைகளைக் காட்டும் நோக்கில் அரசு இதனைச் செய்து வருகிறது. இஃது ஒரு புதிய முயற்சி” என்று கூறினார்.
தலைமை ஆசிரியர் பேச்சு:
இது குறித்து, தேர்வு பெற்ற பள்ளியின் தலைமை ஆசிரியர் இலெ.சொக்கலிங்கம் கூறும்போது, தமிழ்நாடு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி – பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகளின்படி கற்றல், கற்பித்தல், புதுமை புனைதல் மற்றும் கல்வி சார் கணினி வளங்கள் சேகரிக்க இணையத்தளப் பக்கத்தின் மூலம் விண்ணப்பித்திருந்தேன். தமிழ்நாடு முழுவதிலும் தொடக்கக்கல்வி முதல் மேல்நிலைக் கல்வி வரை உள்ள ஏறத்தாழ ஐந்நூறாயிரம் ஆசிரியர்களில் முதற்கட்டமாகத் தேர்வாகி உள்ள 75 ஆசிரியர்களில் நானும் ஒருவன் என்கிறபோது மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். மேலும், சிவகங்கை மாவட்டத்தில் முதற்கட்டமாக இப்பள்ளி மட்டுமே தேர்வாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
பட்டறிவு புதுமை:
இப்பொழுது இங்கு நடைபெற்றுள்ள காணொலி ஆவணப் படப்பிடிப்பு ‘பட்டறிவு (அனுபவம்) புதுமை’ என்கிற தலைப்பில் படமாக்கப்படுகிறது. இளம் மாணவர்களுக்குக் கல்வியின் துய்ப்பு புதுமையாக இருக்க வேண்டும் என்கிற நோக்கத்துடன் கடந்த ஓராண்டுக்கும் முன்பு இப்பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பதவி ஏற்றுக் கொண்டேன்.
பொதுவாக, மாணவர்களை வகுப்பறையின் நான்கு சுவர்களுக்குள் அடைத்து வைக்கக் கூடாது. மாணவர்களுடைய பரந்த பார்வையானது நூல்களுக்குள் மட்டும் முடிந்து விடக்கூடாது. அதையும் தாண்டி, கற்றலானது ஒவ்வொரு வகையிலும் துய்க்கப்படுவதாக இருக்க வேண்டும்; புதியதாக இருக்க வேண்டும்; புதுமையானதாக இருக்க வேண்டும்.