இந்திய ஆதரவு இல்லாதிருந்தால் பிரபாகரனை மீட்டுச் சென்றிருக்கும் நேட்டோ
சிறிலங்காவுக்கு இந்தியா உறுதியான ஆதரவை வழங்கியிருக்காது போனால், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனையும் முக்கிய தளபதிகளையும் நேட்டோ பறவை வான்வழியாக மீட்டுச் சென்றிருக்கும் என்று சிறிலங்கா அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.இறுதிக்கட்டப் போரின் போது சிறிலங்காப் படைகளுக்கு இந்தியா உறுதியான ஆதரவை வழங்கியதால் தான், நேட்டோவின் கனவு பலிக்காது போனதாகவும் அவர் கூறியுள்ளார்.
சிறிலங்காவின் தென்மாகாணத்தில் உள்ள வலஸ்கல என்ற இடத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
கிளிநொச்சியைக் கைப்பற்றிய பின்னர் சிறிலங்கா இராணுவத்தின் எட்டு படைப்பிரிவுகள் முல்லைத்தீவு நோக்கி முன்னேறிச் சென்றபோது, பிரபாகரனையும், அவரது குடும்பத்தினரையும், முக்கிய தளபதிகளையும் வான்வழியாக மீட்க சில வெளிநாட்டு சக்திகள் திட்டமிட்டிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
அதிஸ்டவசமாக இந்தியா துணை நின்றதால் இந்த முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும் டலஸ் அழகப்பெரும மேலும் கூறியுள்ளார்.
சிறிலங்காவுக்கு எப்போதுமே ஒரு உண்மையான நண்பனாக இந்தியா இருப்பதாகவும், அதன்மூலமே விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை வெற்றி கொள்ள முடிந்தது என்றும் சிறிலங்கா அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
Short URL: http://meenakam.com/?p=34694