நோவா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நோவா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 18 நவம்பர், 2012

சிறைச் சாலையில்ஒரு பாட சாலை

 
"சிறைச் சாலையில்ஒரு பாட சாலை!'

சிறைக் கைதிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி வரும் நோவா: கல்லூரி பேராசிரியர்களுக்கு, பணிப் பாதுகாப்பு கோரிக்கைகளை முன் வைத்து, 1979ம் ஆண்டில், போராட்டம் நடத்தி, சிறை சென்றவர்களில், நானும் ஒருவன். மதுரை மத்திய சிறையில், 15 நாட்கள் இருந்த போது, சிறைக் கைதிகளுடன் உரையாடும்
சந்தர்ப்பம் கிடைத்தது. சிறைக்குள் இருக்கும் கைதிகள் இரண்டு வகை. கொலை, கொள்ளை போன்ற பெருங்குற்றங்களில் ஈடுபடுவதை, தொழிலாகக் கொண்டவர்கள் ஒரு வகை. வறுமையால், சிறு சிறு திருட்டுகளில் ஈடுபட்டு, முதன் முறையாக சிறைக்கு வரும், துவக்க நிலை குற்றவாளிகள் இரண்டாம் வகை.இவர்கள், சிறைக்குள் ஒன்றாகக் கலந்து உலவுவதால், கொடூரமான குற்றவாளிகளுடன் பழகி, விரைவில், இவர்களும் குரூரமான எண்ணம் கொண்டவர்களாக மாறி விடுகின்றனர்.

பெரும்பாலானோரிடம் கல்வியறிவு, நல்லொழுக்கம் இல்லாததால், குற்றச் செயல்களில் இருந்து அவர்களால், மீள முடியவில்லை. 15 நாட்கள் சிறையில் கழித்து விட்டு வெளியே வந்தவுடன், கைதிகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்தது.
அப்போதைய தமிழக முதல்வர், எம்.ஜி.ஆருக்கு கடிதம் மூலம், சிறைக் கைதிகளுக்குக் கல்வி போதிப்பதறகாக அனுமதி வேண்டினேன். அதைப் பரிசீலித்த, எம்.ஜி.ஆர்., உடனே அனுமதியளித்தார்.என்னுடன், சில பேராசிரியர்களை அழைத்துக் கொண்டு, தமிழக சிறைகளுக்குச் சென்று, கைதிகளுக்கு கல்வி கற்பிக்க ஆரம்பித்தேன். அப்போது துவங்கியது தான், "அணைக்கும் கரங்கள்' தொண்டு நிறுவனம்.

இதுவரை, எங்களிடம் பயின்ற சிறை மாணவர்களின் எண்ணிக்கை, 2,000க்கும் மேல் இருக்கும். இதில், பலர், இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றுள்ளனர். சட்டம், மருத்துவம் போன்ற படிப்புகளையும், சிறையிலிருந்தபடியே தொடர்ந்தவர்களும் உண்டு.படிப்பில் ஆர்வம் இல்லாதவர்களுக்கு, கைத்தொழில் கற்றுக் கொடுக்கிறோம். அவர்கள் விடுதலையான பின், தொழில் துவங்கத் தேவையான உபகரணங்களையும் வாங்கித் தருகிறோம். தண்டனைக் காலம் நிறைவு பெற்று வெளியே வரும் கைதிகளுக்கு, திருமணம் செய்து வைக்கிறோம். இதுவரை, 1,200 திருமணத்திற்கு மேல் நடத்தியிருக்கிறோம்.

"உழைப்பால்வளர்ந்தேன்!'

தன் படிப்படியான முன்னேற்றத்தைக் கூறும், கோவை பழமுதிர் நிலையம் நிறுவனர் நடராஜன்: குடும்பச் சூழல் காரணமாக, சிறு வயதிலேயே பட்டறை, மில் என, பல இடங்களில் வேலை பார்த்திருக்கிறேன். அப்படிப்பட்ட பணி பயணத்தின் ஒரு அத்தியாயம் தான், பழ வியாபாரம். ஆனால், காலப்போக்கில் இந்த தொழில் நிலைத்து நின்றுவிட்டது. தலைச் சுமையாக, தள்ளுவண்டியாக, தரைக்கடையாக என, மிகப் பெரிய உழைப்பைச் செலுத்தித் தான் வளர்ந்தேன்.பழ வியாபாரம், அதிக, "ரிஸ்க்' கொண்டது. இந்த தொழிலில், விற்பனையில்லை என்றால், பொருளும் மிஞ்சாது; போட்ட முதலீடும் மிஞ்சாது.
பழ வியாபாரத்தில் உள்ள, ரிஸ்க்குகளைக் குறைக்க வேண்டும்; மக்களும் விரும்பி வாங்க வேண்டும் என, யோசித்து நவீன முறைக்கு மாறினேன்.

வாடிக்கையாளர்களுக்கு அதிக வசதிகள் தருவது கூட ஒரு வகையில், சிக்கல் தான். விலை அதிகமாக இருக்கும் என, கடைக்குள் நுழை மாட்டார்கள். ஆனால், சராசரியான விலையிலேயே தரமான பழங்கள் என, நான் தரத் துவங்கினேன்.சென்னையில் கடை துவங்கும் முன், கோயம்பேடு மார்க்கெட்டிற்குச் சென்று, வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் குறைபாடுகளை உன்னிப்பாக கவனித்தேன்.

பழம், காய்கறி வாங்குவது கூட, ஒரு இனிமையான ஷாப்பிங் அனுபவமாக மாற வேண்டும் என, அடுத்தடுத்து துவங்கிய எல்லா கிளைகளிலும், குளிர் சாதன வசதி, வாடிக்கையாளர்களே தேர்ந்தெடுக்கும் வசதி என, பழ வியாபாரத்தை நவீன முறையில் மாற்றினேன்.என் மகன் தொழிலுக்கு வந்த பின், வெளிநாடுகளில் இருந்து, பழங்கள் இறக்குமதி செய்யும் பணிகளில், கூடுதல் கவனம் செலுத்தினோம். மக்களின் தேவை யை அறிந்து, அவர்கள் விருப்பங்களை நிறைவேற்ற சிரத்தை எடுத்துக் கொண்டால், நிச்சயம் ஜெயிக்கலாம்.
 

ஞாயிறு, 11 நவம்பர், 2012

அறச்சாலையாகும் சிறைச்சாலைகள்!

அறச்சாலையாகும் சிறைச்சாலைகள்!

First Published : 10 November 2012 05:15 PM IST
நூலகத்தின் கதவுகள் திறக்கப்படும் போதெல்லாம் சிறைச்சாலையின் கதவுகள் மூடப்படுகின்றன என்பார்கள். ஆனால் மூடப்பட்ட சிறைச்சாலைக்குள்ளேயே கைதிகளுக்கு படிப்பறிவையும் தொழிற்பயிற்சிகளையும் அளித்துவருகிறார் மதுரையைச் சேர்ந்த டாக்டர் நோவா. அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றிருக்கும் நோவா கடந்த முப்பது ஆண்டுகளாக "அணைக்கும் கரங்கள்' என்னும் அறக்கட்டளையை நிறுவி பல சமூகப் பணிகளைச் செய்துவருகிறார். அவரிடம்
 பேசியதிலிருந்து...
 ""பெரும்பாலும் உணர்ச்சிவசப்பட்டு ஒருவர் செய்யும் செயல்களே குற்றங்களில் முடிகிறது. சிறைச்சாலையை அறச்சாலையாக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் 1982-ல் தொடங்கப்பட்டதுதான் "அணைக்கும் கரங்கள்' என்னும் தன்னார்வ அமைப்பு.
 சிறையில் இருக்கும் கைதிகளுக்கு ஆரம்பக் கல்வி, உயர் கல்வி, திறந்த வெளிப் பல்கலைக்கழகங்கள், அஞ்சல் வழிக் கல்வி மூலமும் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு படிப்பதற்கு உதவுகிறேன். எங்கள் அமைப்பின் சிறிய முயற்சியால் இதுவரை 8,650 பேர் பட்டம் பெற்றுள்ளனர்!
 பல்கலைக்கழக துணைவேந்தர்களை சிறைக்குள்ளேயே அழைத்துவந்து, பட்டம் பெற்றவர்களுக்கான சான்றிதழ்களை அளிக்கச் செய்கிறோம். இதுபோன்ற செயல்கள், அவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்க உதவும்.
 படிப்பில் ஆர்வம் இல்லாதவர்களுக்கு கடிகாரம் பழுது பார்க்கும் பயிற்சி, கணினிப் பயிற்சி, சுருக்கெழுத்துப் பயிற்சி, தட்டச்சுப் பயிற்சி, தையற்கலைப் பயிற்சி, ஊறுகாய், அப்பளம், ஜாம் தயாரிக்கும் பயிற்சி, ஸ்க்ரீன் பிரிண்டிங் பயிற்சி ஆகியவற்றை அளிக்கிறோம். சிறையிலிருந்து வெளியேறியவுடன் அவர்கள் தொழில் தொடங்குவதற்கான உதவிகளையும் செய்து தருகிறோம்.
 சந்தர்ப்ப சூழ்நிலையால் குற்றம் செய்து
 சிறைக்கு வரும் ஒருவர் மனம் மாறித் திருந்துவதற்கான வாய்ப்பை அளிக்கவேண்டும். இப்படிப்பட்ட மறுவாழ்வுப் பணிகளை சிறைக் கைதிகளுக்கு செய்வதின் நோக்கம் அதுதான்.
 சிறைக் கைதிகளின் குழந்தைகளுக்கு பள்ளிக் கட்டணம், சீருடைகள், புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் கல்வி தொடர்பான சேவைகளை அளிப்பதுடன் அந்தக் குழந்தைகளை அடிக்கடி சென்று பார்த்து வருவதன் மூலம், சிறையில் இருக்கும் கைதியின் மனதை மாற்றுகிறோம்.
 எங்களின் சேவைப் பணிக்கான கொடைகளை தனியார் நிறுவனங்களிடமிருந்தோ அரசிடம் இருந்தோ நாங்கள் பெறுவதில்லை. என்னிடம் பயின்று இன்றைக்கு உயர்ந்த நிலையில் இருக்கும் மாணவர்களிடமிருந்தும் அரிமா சங்கம், ரோட்டரி சங்கம் போன்ற அமைப்புகளிடமிருந்து நல்ல உள்ளங்களைக் கொண்டவர்களிடமிருந்தும் பெறுகிறோம்.
 எங்களின் சேவையைப் பாராட்டி சமீபத்தில் "மதுரா டிராவல்ஸ்' நிறுவனம் ஆண்டுதோறும் வழங்கும் "மதுரா மாமனிதர்' விருதை இந்தாண்டு எனக்கு வழங்கியிருக்கிறார் அதன் நிறுவனர் வீ.கே.டி. பாலன். ஒருலட்சம் ரூபாய் பரிசுத் தொகையைக் கொண்ட அந்த விருதை எனது சமூகப் பணிக்குக் கிடைத்த அங்கீகாரமாகவே நினைக்கிறேன்'' என்றார் டாக்டர் நோவா.