(தோழர் தியாகு எழுதுகிறார் 219 : உரிமைத் தொகை உண்டு! உரிமைக் கல்வி கிடையாதா? – தொடர்ச்சி)

தோழர் தியாகு எழுதுகிறார்
அவலமான கல்விச் சூழல் 1/2

இனிய அன்பர்களே!

தமிழ்நாட்டின் கல்விநிலை குறித்துக் கவலைப்படுவதில் இளைஞர் அரண் தனித்து விடப்படவில்லை. சவகர் நேசன் போன்ற கல்விச் சிந்தனையாளர்கள் இந்நிலை குறித்து மிக ஆழ்ந்த கவலை கொண்டிருக்கின்றார்கள் என்பதைக் கண்டு வருகின்றோம்.

மாநிலக் கல்விக் கொள்கையில் என்ன எதிர்பார்க்கிறோம் எனபது குறித்து சூன் 10ஆம் நாள் மதுரையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கல்வியாளர்களும் பேராசிரியர்களும் புதிய கல்விக் கொள்கையில் என்ன எதிர்பார்க்கிறோம் என்பதைப் பொதுவில் தெளிவாக்கியுள்ளனர்.

இந்தச் செய்தியாளர் சந்திப்பிலிருந்து தெரிய வரும் சில உண்மைகளை உங்கள் கவனத்துக்குக் கொண்டுவருகிறேன்: முதன் முதலாக 1968ஆம் ஆண்டில் ஒரு கல்விக் கொள்கை அறிவிக்கப்பட்டது. இது அவ்வளவாகப் பேசப்படவில்லை. பிறகு 1986ஆம் ஆண்டிலும் 1992ஆம் ஆண்டிலும் கல்விக் கொள்கைகள் அறிவிக்கப்பட்ட பின் நிறைய குற்றாய்வுகள் எழுந்தன. இந்தக் கொள்கைகளின் சிலபல கூறுகள் குறை கூறப்பட்ட போதிலும் முழுமையாக மறுதலிக்கப்படவில்லை. ஆனால் மோதியரசின் புதிய தேசியக் கல்விக் கொள்கை – 2020தான் முற்போக்குக் கல்வியாளர்களால் அறவே மறுதலிக்கப்பட்டுள்ளது. தேசியக் கல்விக் கொள்கை – 2020 எனப்படும் இந்தப் புதிய கல்விக் கொள்கைக்குத் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, அனைத்திந்திய அளவிலும் பேராசிரியர்களும் மாணவர்களும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

புதிய தேசியக் கல்விக் கொள்கையின் செயல்பாடு தற்சார்பான, புறஞ்சார்ந்த ஆராய்ச்சிகளுக்கு இடம் கொடுக்காது. அரசின் நோக்கங்களுக்காக ஆராய்ச்சிகள் வளைக்கப்படும்.

புதிய தேசிய கல்விக் கொள்கை இப்போதிருக்கும் ஆண்டுப் பகுப்பை உரிய காரணமே இல்லாமல் உடைத்து, பள்ளிக் கட்டமைப்பை அடியோடு சிதைத்து விடும்.

புதிய தேசிய கல்விக் கொள்கை பல்கலைக்கழகச் சேர்க்கைக்குப் பொது நுழைவுத் தேர்வை நுழைக்கிறது. இதற்குத்தான் கியூட் (COMMON UNIVERSITY ENTRANCE TEST) என்று பேர்! இது பள்ளிப் படிப்பை மதிப்பற்றதாக்கி விடும்.

ஆகவே ‘நீட்டும்’ கூடாது, ‘கியூட்டும்’ கூடாது என்பது தமிழ்நாட்டின் கோரிக்கையாக இருக்க வேண்டும்.

மக்கள் கல்விக் கூட்டியக்கம் தமிழ்நாட்டின் கல்விச் சூழலை இப்படிப் படம் பிடித்துக்காட்டுகிறது:

மாணவர்கள் மீதான ஒடுக்கு முறைகளும், ஆசிரியர்கள் மீதான சுரண்டல்களும், அடக்குமுறைகளும், தனியார் கல்வி நிறுவனங்களின் விதிமீறல்களும், பகற் கொள்ளைகளும், கல்வி வளாகங்களில் சாதிய ஒடுக்கு முறைகளும் இன்றைய சூழலில் மேலோங்கி வருகின்றன.

இந்நிலையில் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் கல்வித் திட்டங்களும், செயல்பாடுகளும் மக்கள் நலனுக்குப் பகையாக உள்ளதை மிகவும் கவலையுடன் கவனிக்கும் தமிழ்ச் சமூகத்தின் பல்வேறு அமைப்புகள் ஒன்றிணைந்து, இதுகுறித்து நுணுக்கமான உரையாடல்களை மேற்கொள்ளவும், கல்வி குறித்த பல்வேறு சிக்கல்கள், அவற்றுக்கான நடைமுறைத் தீர்வுகள் பற்றி அரசுக்கு வலியுறுத்தவும் “மக்கள் கல்விக் கூட்டியக்கம்” எனும் பெயரில் ஒரு கூட்டமைப்பை உருவாக்கி உள்ளன.

தமிழகத்திலுள்ள பல்வேறு சனநாயக இயக்கங்கள், கல்வியாளர்கள், ஆர்வலர்கள் இக்கூட்டமைப்பில் இணைந்துள்ளனர். சூலை எட்டாம் நாள் சென்னை சேப்பாக்கம் செய்தியாளர்கள் சங்கக் கட்டடத்தில் நடைபெற்ற ஒரு நாள் கலந்துரையாடல் மூலமாகக் கீழ்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன.

நடுவண் அரசின் தேசிய கல்விக் கொள்கையைத் தமிழ்நாடு அரசு முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டும். வெவ்வேறு பெயர்களை வைத்துக் கொண்டு ஒன்றிய அரசுக் கொள்கையின் முக்கிய அம்சங்களை நடைமுறைக்குக் கொண்டு வருவதைத் தமிழக அரசு தவிர்க்க வேண்டும்.

தமிழகத்திற்கான மாநிலக் கல்விக் கொள்கை, மக்கள் நலனை முன்னிறுத்திச் சமத்துவத்தை வலியுறுத்தும் கல்விக் கொள்கையாக இருக்க வேண்டும். பேராசிரியர் சவகர் நேசன் அவர்கள் தயாரித்து வரும் மக்களுக்கான கல்விக் கொள்கை நூலை வெளிக் கொண்டுவந்து, அதன் சிறப்பம்சங்களை மக்களிடம் எடுத்துச் செல்லலாம் எனவும் தீர்மானிக்கப் பட்டது.

பல ஆண்டுகளாகப் பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள் நியமனத்திற்காகப் பெறப்பட்டுள்ள பல கோடி உரூபாய் இலஞ்ச ஊழலை விசாரிக்கத் தனிப்படை அமைத்து, ஊழல் புரிந்தவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி ஆசிரியர் நியமனத்தில் தமிழ்நாட்டில் எந்தவித இலஞ்சமும் பெறப்படாமல் தடுக்கப்படும் என்ற உத்தரவாதத்தை அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

மாணவர்களுக்கான கல்விக் கட்டண விகிதத்தை வெளிப்படையாக மக்கள் அறியும் வண்ணம் பல ஊடகங்களில் அறிவித்து, அதை மீறும் கல்வி நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கத் தனிப்பட்ட சட்டபூர்வ அதிகாரம் கொண்ட குறை தீர்க்கும் அமைப்பை உருவாக்க வேண்டும்.

சாதி மதப் பாகுபாடுகளை நீக்கக் கூடிய பாடதிட்டங்களை எல்லா நிலையிலும் அறிமுகப்படுத்த வேண்டும். ஏற்கெனவே திணிக்கப்பட்டுள்ள சாதிய மற்றும் மத கருத்துக்களைக் கண்டறிந்து அவற்றைப் பாடத்திட்டங்களிலிருந்து முற்றிலுமாக நீக்க வேண்டும். அறிவியல் சிந்தனையையும் பகுத்தறிவு கொண்ட பார்வையையும் உருவாக்கும் பாடத்திட்டங்கள் அதிக அளவில் இடம்பெற வேண்டும்.

ஒப்பந்த ஆசிரியர் என்ற நியமன முறையை முற்றிலுமாக ஒழித்து விட்டு முழு நேரப் பணியாளர்களாக ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்பட வேண்டும். சுயநிதி கல்லூரிகளில் மிகக் குறைந்த ஊதியத்திற்கு எந்தவித பணிப் பாதுகாப்பு உறுதியும் இன்றிப் பணியில் அமர்த்தப்பட்டு, உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாகி வரும் பல்லாயிரக்கணக்கான பேராசிரியர்களின் நிலை மேம்பட உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்குக் கண்டிப்பான ஆசிரியர் பாதுகாப்புச் சட்டங்களை உருவாக்குவதுடன், அவற்றைத் தீவிரமாகச் செயல்படுத்த வேண்டும். பல்கலைக் கழக மானியக் குழு பரிந்துரைத்துள்ள ஊதிய விகிதத்தைச் சுயநிதிக் கல்லூரி ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும். அரசு விதிகளை மீறும் சுயநிதிக் கல்லூரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட வேண்டும்.

அதே போல், பள்ளிக் கல்வியில் காலியாக உள்ள ஆசிரியர் பணி இடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். தனியார் மழலைப் பள்ளிகள் அனைத்தும் அரசுப் பள்ளிகளாக மாற்றப்பட வேண்டும். மழலையர் பள்ளியில் தமிழ் மட்டுமே பயிற்றுமொழியாக இருக்க வேண்டும். அதேபோல் தாய்த் தமிழ்ப் பள்ளிகள் அனைத்தும் அரசு உதவி பெறும் பள்ளிகளகளாக மாற்றப்பட வேண்டும்.

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 249