(தோழர் தியாகு எழுதுகிறார் 182 : சந்திரிகாவின் குற்ற ஒப்புதல் -தொடர்ச்சி)

பாசிசத்தின் வன்முறை நிறுவனமாய் தே.பு.மு.(என்.ஐ.ஏ.)!

இனிய அன்பர்களே!

இந்திய வல்லரசின் பாசிசப் போக்கு நாளுக்கு நாள் மென்மேலும் மோசமாக வளர்ந்த வண்ணம் உள்ளது. அடக்குமுறைச் சட்டங்களுக்கெல்லாம் தலைச் சட்டமாக இருக்கும் ‘ஊபா’ (UAPA – Unlawful Activities Prevention Act – சட்ட எதிர் செயல்கள் தடுப்புச் சட்டம்) தமிழ்நாட்டில் சகட்டுமேனிக்கு ஏவப்படுகிறது.

இதற்கான காவல் எந்திரமாக தேசியப் புலனாய்வு முகமை (NIA – National Investigation Agency) பயன்படுத்தப்படுகிறது. இந்த இரண்டையும் எதிர்த்து முனைப்புடன் இயக்கம் நடத்த வேண்டிய தேவையை பாசிச எதிர்ப்பு, குடியாட்சிய ஆற்றல்கள் போதிய அளவு உணரவில்லை எனத் தோன்றுகிறது.

இந்நிலை குறித்து பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியில் கலந்து பேசினோம். முதற்கட்டமாக என் ஐ ஏ குறித்தும், ஊபா குறித்தும், அண்மைக் காலத்தில் இவை ஏவப்பட்டுள்ள நிகழ்வுகள் குறித்தும் மக்களிடையே முனைப்புடன் பரப்புரை செய்யதத் தீர்மானித்தோம். பா.எ.ம.மு. சார்பில் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையை ஈண்டு தாழி அன்பர்களுடன் பகிர்கிறேன்.

++
இசுலாமியர்களை வேட்டையாடும் தே.பு.மு.(என்.ஐ.ஏ.)

வழக்கறிஞர்கள் மீதும் பொய் வழக்கு!

தமிழ்நாட்டில் தே.பு.மு.(என்.ஐ.ஏ.) நடத்திய மற்றுமொரு கைது நடவடிக்கை!
புகழ்மிகு முன்னணி(பாப்புலர் ஃப்ரண்ட்டு) அமைப்பு கடந்த ஆண்டு செப்டம்பரில் தடைசெய்யப்பட்டவுடன் அவ்வமைப்பைக் கலைத்து விட்டதாக அதன் நிர்வாகிகள் அறிவித்து விட்டனர். ஆனால், சுமார் ஏழு மாதங்கள் கழித்து, அவ்வமைப்பில் நிர்வாகியாய் இருந்த சென்னையைச் சேர்ந்த தோழர் அப்துல் ரசாக் உள்ளிட்ட ஐந்து இசுலாமியர்கள் கடந்த மே 9 அன்று தேசியப் புலனாய்வு முகமையால் ( என்.ஐ.ஏ) புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்!

இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப் பட்டவர்களுக்காக முகமது அப்பாசும் முகமது யூசுப்பும் வாதாடினார்கள். எந்த வழக்குக்காக அவர்கள் வாதாடிக் கொண்டிருந்தார்களோ அதே வழக்கில் அவர்கள் சேர்க்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.

புகழ்மிகு முன்னணி(பாப்புலர் ஃப்ரண்ட்டு) அமைப்பினர் வெளிநாடுகளில் இருந்து பணம் பெற்றுக் கொண்டு பயங்கரவாத செயல்களுக்கு திட்டமிடுகின்றனர்; சட்டவிரோத செயல்கள், பயங்கரவாத செயல்கள் செய்வதற்கு சதித்திட்டம் தீட்டுகின்றனர், இரு பிரிவினருக்கு இடையே பகை வளர்க்கும் செயல்களில் ஈடுபடுகின்றனர்; தங்கள் பயங்கரவாதச் செயல்களுக்கு ஆட்சேர்க்கின்றனர்; பேரணி நடத்துகின்றனர்; ஐ.எசு.ஐ.எசு. போன்ற பயங்கரவாத அமைப்புகளுடன் இரகசிய தொடர்பு வைத்துக் கொண்டு அவர்களை ஆதரிக்கின்றனர் போன்ற தகவல்கள் தமக்கு கிடைக்கப்பெற்றதன் அடிப்படையில் இவ்வழக்கைப் போட்டிருப்பதாக சொல்கிறது தே.பு.மு.(என்.ஐ.ஏ.).

புகழ்மிகு முன்னணி(பாப்புலர் ஃப்ரண்ட்டு) கடந்த செட்டம்பர் 28 ஆம் நாள் தடைசெய்யப்பட்டது. கடந்த செட்டம்பர் 19 அன்று போடப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவுகள் 120(ஆ), 153-அ, 153-அஅ ஆகியவற்றின் கீழும் சட்டஎதிர் செயல்கள் தடுப்புச் சட்டப் பிரிவுகள் 13,17,18, 18(ஆ), 38, 39 ஆகியவற்றின் கீழும் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஏற்கெனவே 9 பேர் சிறைபட்டிருந்தனர். ஊபா உள்ளிட்ட அடக்குமுறை சட்டங்களுக்கு எதிரான கூட்டமைப்பு ஒன்றின் தமிழ் மாநில அமைப்பாளராகச் செயல்பட்ட தோழர் காலித்து முகமதுவும் அந்த 9 பேரில் ஒருவர்.

கடந்த ஏப்பிரல் 13 அன்று மேற்சொன்ன பிரிவுகளுடன் ஊபா பிரிவுகள் 20, 22B-ஆவும் சேர்த்து இன்னொரு வழக்குப் போடப்பட்டிருந்தது. முதல் வழக்குப் போடப்பட்டதோ ஏப்ரலில்! ஆனால், அதற்கான கைது நடவடிக்கையை தே.பு.மு.(என்.ஐ.ஏ.) மேற்கொண்டது 22/9இல்! இதில் 21 பேர் சிறைப்பட்டனர். அவர்களில் மூன்று பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தோர்.

உரத்து எழுப்ப வேண்டிய கேள்விகள்:

  1. தே.பு.மு.(என்.ஐ.ஏ.), புகழ்மிகு முன்னணி(பாப்புலர் ஃப்ரண்ட்டு) பற்றி மேற்குறிப்பிட்ட தகவல்கள் கிடைத்ததாக சொல்கிறது. அந்த தகவல்களைக் கொண்டு ஏப்பிரலில் ஒரு வழக்குப் போட்டுள்ளது. பின்னர் அதே தகவல்களைக் கொண்டு இன்னொரு புதிய வழக்கைச் செட்டம்பரில் பதிந்துள்ளது. குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் பெயர்களைத் தவிர வேறெந்த மாற்றமும் இவ்விரு வழக்கிலும் இல்லை. ஒரே குற்றத்திற்கு இரு வேறு வழக்குகள் போடுவது சட்ட நடைமுறைகளுக்குப் புறப்பானது இல்லையா?
  2. பயங்கரவாதக் குற்றங்களுக்கான பிரிவுகளின் கீழ் ஏப்பிரல் மாதத்தில் ஒரு வழக்கைப் பதிந்துவிட்டு ஐந்து மாதங்கள் கழித்து வழக்குக்காக கைது செய்திருப்பதில் இருந்தே தெரிகிறது குற்றச்சாட்டுகளின் உண்மைத் தன்மை!
  3. ஊபா பிரிவு 13 சட்டஎதிர் செயல்களில் ஈடுபடுவது பற்றியது. குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் ஈடுபட்ட சட்டவிஎதிர் செயல்கள் என்ன? இது பற்றிய எவ்வித குறிப்பும் இல்லாமல் பிரிவு 13 ஐ வழக்கில் சேர்த்தது சட்டப் புறம்பானதில்லையா?
  4. இரு பிரிவுகளுக்கு இடையே நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும்படி குற்றஞ்சாட்டப்பட்டவர்களால் எங்கு, எப்போது என்ன பேசப்பட்டது?
  5. பிரிவு 38,39 ஆகியவை பயங்கரவாத அமைப்பில் உறுப்பினராய் இருப்பது பற்றியது. புகழ்மிகு முன்னணி(பாப்புலர் ஃப்ரண்ட்டு) பயங்கரவாத அமைப்பு என்பதற்காகத் தடை செய்யப்படவில்லை, மாறாக சட்டஎதிர் செயல்களில் ஈடுபடும் அமைப்பு என்ற பெயரிலேயே தடைசெய்யபட்டுள்ளது. அதுமட்டுமின்றி, அப்படி தடைசெய்யப்படுவதற்கு ஒரு கிழமைக்கு முன்பே ஊபாவின் இந்த பிரிவுகளைப் பயன்படுத்த முடியுமா?
  6. வழக்கம் போலவே, ஊபாவின் பிரிவு 18 – பயங்கரவாதச் செயல்களை செய்வதற்காகச் சதித் திட்டம் தீட்டிய குற்றத்திற்கான பிரிவு இவ்வழக்கிலும் சேர்க்கப்பட்டுள்ளது. வழக்கம் போலவே, எவ்வித பயங்கரவாத செயல்களும் நடக்காமலே இப்பிரிவு பயன்படுத்தப்பட்டுள்ளது.

குறிவைக்கப்படும் வழக்கறிஞர்கள்:

இவ்வழக்கு சட்டத்திற்கு புறம்பானது என்பதால் அதை நீக்கக் கோரி குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் உயர்நீதிமன்றத்தை அணுகுகின்றனர். குற்றஞ்சாட்டப்பட்டவர்களைத் தே.பு.மு.(என்.ஐ.ஏ.) தன் விருப்பப்படி விசாரணைக்கு அழைப்பதையும் பொருட்களைப் பறிமுதல் செய்ததையும் அவர்கள் நீதிமன்றத்தில் கேள்விக்குள்ளாக்குகின்றனர்.

குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சார்பாக வழக்கை நடத்திய வழக்கறிஞர்கள்தான் முகமது அப்பாசும் முகமது யூசுப்பும் ஆவர்.

முகமது அப்பாசு இவ்வழக்கை எதிர்த்த 10 வழக்குகளில் வாதாடியவர்;4 வழக்குகளில் முகமது யூசுப்பும் வாதாடியிருந்தார்.

இதற்கிடையே 5.3.2023 அன்று மதுரை கோரிபாளையத்தைச் சேர்ந்த முகமது அலி ஜின்னா என்பவரை ’விசாரணை’ என்ற பெயரில் தே.பு.மு.(என்.ஐ.ஏ.) அதிகாரி கா.து.க. செந்தில்குமார் கூட்டிச் செல்கிறார். சின்னா தே.பு.மு.(என்.ஐ.ஏ.) அதிகாரிகளால் மிக மோசமாக தாக்கப்பட்டுச் சித்திரவதை செய்யப்படுகிறார். இதனால் அவர் மயங்கி விழுகிறார். அவர் இறந்துவிடுவாரோ என்று அஞ்சி உடனே அவரை மதுரை இராசாசி அரசு மருத்துவமனையில் தே.பு.மு.(என்.ஐ.ஏ.) அதிகாரிகள் சேர்க்கின்றனர். ஆனால், அவருக்கு வலிப்பு வந்த நிலையில் மருத்துவமனைக்கு அருகில் கிடந்ததாக இட்டுக்கட்டுகின்றனர்.

இவ்விசயத்தில் தே.பு.மு.(என்.ஐ.ஏ.) அதிகாரிகள் கையும் களவுமாகச் சிக்கும் வகையில் மருத்துவமனையில் சின்னாவைச் சேர்க்கும்போது பதிவான மறைகாணி(சிசிடிவி) காணொளிகளை வழக்கறிஞர் முகமது அப்பாசு பெற்றுவிடுகிறார். இது கா.து.க.(டி.எசு.பி.) செந்தில்குமாருக்கு ஆத்திரமூட்டுகிறது. தே.பு.மு.(என்.ஐ.ஏ.) வின் சித்திரவதையை அம்பலப்படுத்தி முகமது அப்பாசு ஒரு முகநூல் பதிவை எழுதுகிறார். இதனால் ஆத்திரம் அடைந்த தே.பு.மு.(என்.ஐ.ஏ.) கா.து.க.(டி.எசு.பி.) செந்தில்குமார் தல்லாகுளம் காவல் நிலையத்தில் ’தே.பு.மு.(என்.ஐ.ஏ.) மீதான அவதூறு பரப்பல்’ என்று முகமது அப்பாசு மீது புகார் செய்கிறார்.

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 216