[படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]
சிறிலங்கா நம்பகத்தன்மையை மீண்டும் இழக்கத் தொடங்கி விட்டது
– பல நாடுகள்   மனக்குறை!

   செனீவா ஐ.நா மனித உரிமைக் கழக 35ஆவது அமர்வு (ஆனி 09, 2048/ சூன் 23, 2017 அன்று) நிறைவடைந்துள்ளது. தமிழ் மக்கள் தமது நேரடி வாழ்வியல்  பட்டறிவுகளினூடாக சிறிலங்கா எவ்வாறு நடந்து கொள்ளும் என்று திரும்பத் திரும்ப உலக நாடுகளிற்கு வலியுறுத்தி வந்ததனை பல நாடுகள் ஏற்றுக் கொள்ளும் நிலைமை இன்று உருவாகி வருகின்றது.
   2015  அத்தோபரில் நிறைவேற்றப்பட்ட ஐ.நா தீர்மானத்திலுள்ள 25  கூறுகளில் எதனையுமே சிறிலங்கா அரசு முழுமையாக நிறைவேற்றப் போவதில்லை; அதனை  ப்பன்னாட்டியத்திற்குப்  பல்வேறு வழிகளில்  மெய்ப்பித்துக் காட்டுவோம் என்று பிரித்தானியத் தமிழர் பேரவை அன்று கூறியது இன்று  மெய்யாகி வருகின்றது.
 மேற்படித் தீர்மானத்தின்  நிறைவேற்றுக் காலத்தினை 2 வருடங்களினால் நீடிக்க  அனைத்து நாடுகள் 2017 மார்ச்சில் மேலுமொரு தீர்மானத்தினைக் கொண்டு வந்த போதிலும்,  இப்போது சிறிலங்கா மீதான  மனநிறைவின்மை வெளிப்படையாக வளர்ந்து வருவதனைக் கூட்டத் தொடரில் கலந்து கொண்ட பிரித்தானியத் தமிழர் பேரவை அறிய வருகின்றது.
 மேற்படித் தீர்மானத்தின் இணை யேற்பாளர்களாகப்(Co sponsor) பொறுப்பேற்று கையொப்பமிட்ட  முதன்மையான பல நாடுகளை இக் கூட்டத் தொடரில் சந்தித்த பிரித்தானியத் தமிழர் பேரவை மேற்படித் தீர்மானத்தில் உள்ள  செய்திகளைச் சுட்டிக் காட்டி கலந்துரையாடியது. ஆதாரபூர்வமான உண்மைகள் மூலம் நாம் எடுத்துரைத்த சிறிலங்காவின் இழுத்தடிப்புகளை பெரும்பாலான நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளதனை இங்குக் குறிப்பிடப்பட வேண்டும்.
   மனித உரிமைக் கழக ஆணையாளர் அலுவலகத்துடனும் (OHCHR) பிரித்தானியா (U.K.), அமெரிக்கா (USA), கனடா (Canada), இந்தியா (India), சீனா (China), பிரான்சு (France), சுவீடன் (Sweden), தென்னாப்பிரிக்கா (South Africa), எத்தியோப்பியா(Ethiopia), மெக்சிகோ (Mexico), நியூசிலாந்து (New Zealand),  செருமனி (Germany), ஆர்செண்டினா (Argentina), சுவிற்சர்லாந்து (Switzerland), அயர்லாந்து (Ireland), கானா (Ghana), நோர்வே (Norway), நெதர்லாந்து (Netherlands), அல்பேனியா (Albania),  சுலோவேனியா (Slovenia) உள்ளிட்ட பல நாடுகளுடனும் பல  பன்னாட்டு நிறுவனங்களுடனும் இக்கூட்டத் தொடரில் சந்தித்து உரையாடப்பட்டது.
 இச் சந்திப்புகளில் கைது செய்து காணாமல் போனோரின் உறவுகளின் திருகோணமலை, கிளிநொச்சி, வவுனியா நகரங்களில் நீடிக்கும் போராட்டம், கேப்பாபிலவு, இரணைதீவு, முள்ளிக்குளம் உள்ளிட்ட நில மீட்புக்கான தொடர்ச்சியான மக்கள் போராட்டங்கள், முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நிகழ்வு தொடர்பாக அருட்தந்தை எழில் கைது செய்யப்பட்டமை, மனித உரிமை செயல்பாட்டாளர்கள் மீது தொடரும் அழுத்தங்கள், பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படாமை, அரசியல் கைதிகளின் விடுதலை, பிடித்துக் காணாமல் போகச் செய்யப்பட்டோரின் பெயர்ப் பட்டியல் வெளிவிடாமை உள்ளிட்ட பல  செய்திகள் எம் தரப்பால் முன்வைக்கப்பட்டது.
  இக் கூட்டத் தொடரின் நிகழ்ச்சி நிரலில் சிறிலங்காபற்றிய  செய்தி எதுவும் இல்லாதபோதும் வழமை போன்று பிரித்தானியா தனது அழுத்தந் திருத்தமான தெரிந்தெடுக்கப்பட்ட  சொற்களின் மூலம் “கால வரையறையுடன்கூடிய விரிவான ஒரு திட்டத்தின் அடிப்படையில் ஐ.நா தீர்மானத்தினை (34/1) நிறைவேற்ற வேண்டும், அது அரசியலமைப்புச் சீர்திருத்தம் மூலம் அரசியல் அதிகாரப் பகிர்வு – காணாமல் போனோருக்கான அலுவலகத்தினை செயல்பட வைக்க வேண்டும்” என்ற கோரிக்கைகளை தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
 2017 மார்ச்சு கூட்டத் தொடரில் எமது வலுவா மறுப்பிற்குப்  பின்னரும் 2  ஆண்டுக் கால நீட்டிப்பினை  அனைத்து நாடுகள் சிறிலங்காவிற்கு வழங்கிடத் தீர்மானித்திருந்தது. கால நீட்டிப்பு வழங்கினாலும் சிறிலங்கா அரசு தீர்மானத்தினை  நடைமுறைப்படுத்தாமல் இழுத்தடிக்கும் என்று நாம் எடுத்துரைத்திருந்தோம். எனவே “கால வரையறையுடன் கூடிய விரிவான ஒரு திட்டத்தின் அடிப்படையில் ஐ நா தீர்மானத்தினை நிறைவேற்ற வேண்டும்” என்ற  குறிப்பையாவது உள்ளடக்குமாறு  பிரித்தானியத் தமிழர் பேரவை (BTF),  க.த.பே.(CTC),  அ.த.அ.செ.(USTPAC) என்பன இணைந்து முன்வைத்துப் பல நாடுகளையும் ஏற்றுக் கொள்ள வைத்தமை இங்கு குறிப்பிடப்பட வேண்டும்
 இத் தருணத்தில் தமிழர் தரப்பு என்ன செய்யப் போகின்றது? பிரித்தானியாவின் முன்மாதிரியைப் பின்பற்றித்  தமிழர் வாழும் ஏனைய நாடுகளிலும் சிறிலங்காவிற்கெதிரான அழுத்தங்களைப் பயன்படுத்தச் செய்ய வேண்டும். மாறி வரும்சூழ்நிலையை எமக்குச் சாதகமாகத் திருப்ப செயல்சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் பிரித்தானியாவிலும் ஏனைய நாடுகளிலும்  எல்லாத் தமிழ் தேசிய அமைப்புகளும் செயல்பாட்டாளர்களும் ஒற்றுமையாக முன்னெடுக்க வேண்டும் என பிரித்தானியத் தமிழர் பேரவை உரிமையுடன் வேண்டுகோள் விடுக்கின்றது.Best Wishes
சங்கீதன்(S. Sangeeth )
பி.த.பே.ஊடக ஒருங்கிணைப்பாளர்    
(BTF Media Coordinator)