thalaippu_thannerillaatha_thamizh

வரைபடம்-தொல்தமிழப்பகுதி : map_tholthamizhpakuthi

 

தன்னேரிலாத தமிழ்

“ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி
யேங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும்  ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது
தன்னே ரிலாத தமிழ்                  – தண்டியலங்காரவுரை மேற்கோள்
  4000 ஆண்டுகளுக்கு முன் நாவலந் தேயமாகிய ஆதி இந்தியாவின் (பாக்கிசுதானும் சேர்த்து) பெரும்பாலானப் பகுதிகளில் தொல்தமிழ்க் குடும்பமொழி பேசப்பட்டு வந்ததற்குச் சான்றுகள் கிடைத்து வருகின்றன. பலுசிசுத்தான் பகுதியில் பிராகூயி என்கிற தமிழ்க்குடும்பமொழி பேசப்பட்டு வருவது இதற்குச் சான்று. கி.மு 1900-க்குப் பின்பு ஆரியர்கள் மத்திய ஆசியாவிலிருந்து (கசாக்சுதான்) சிறிது சிறிதாக அரப்பாவில் (http://en.wikipedia.org/wiki/Harappa) குடியேறத் துவங்கினர்.  ஆரியர் அரப்பாவிற்கு வந்த போது சிந்து வெளி நாகரீகம் (கி.மு. 2900 – 1900) பெரும்பாலும் அழிந்திருந்தது. அங்கு வாழ்ந்த மக்கள் தொல்தமிழ்க் குடும்பமொழி பேசியிருக்க வாய்ப்புள்ளது என்று பின்லாந்தைச் சேர்ந்த இந்தியவியல் பேராசிரியர் அசுகோ பர்ப்போலா (http://en.wikipedia.org/wiki/Asko_Parpola) அவர்களும், தமிழகத்தைச் சேர்ந்த திரு ஐராவதம் மகாதேவன் (http://en.wikipedia.org/wiki/Iravatham_Mahadevan) அவர்களும் கூறுகின்றனர். ஆனால் அரப்பாவிலும் மொகஞ்சதாரோவிலும் பல மொழிகள் பேசப்பட்டுள்ளதாக கூறுகின்றார் ஆர்வர்டு பல்கலைக்கழகத்தின் சமசுகிருதப் பேராசிரியர் மைக்கல் விட்சல் (http://en.wikipedia.org/wiki/Michael_Witzel) அவர்கள். அவர் அப்பகுதியில் முண்டா மொழிகளும் பேசப்பட்டிருக்கக் கூடும் என்கிறார். எது எப்படியோ சிந்து வெளி மக்கள் ஆரியருக்கு முன்னரே வாழ்ந்துள்ளனர் என்று இதிலிருந்து தெரிகிறது. தொல்தமிழ்க்குடும்பமொழிஅங்கு பேசப்பட்டிருக்கும் வாய்ப்புமுள்ளது என்பது வேதகாலத்தில் ஆரியர்கள் எழுதிய இருக்கு (Rig Veda : 1500 -1200 BCE) வேதத்திலிருக்கும் தமிழ்க்குடும்பமொழிச் சொற்கள் மூலம் தெரிகிறது. முண்டா மொழிச் சொற்களும் இருக்கு வேதத்திலிருப்பதிலிருந்து முண்டா மொழியும் அங்கு பேசப்பட்டிருக்க வாய்ப்புள்ளது.
  ஆரியர் வருகைக்குப் பின் வட மொழியின் கலப்பினாலும்  மாயையினாலும் வடக்குத் தமிழ்க்குடும்பமொழி ஒன்றன்பின் ஒன்றாக சிதையத்  தொடங்கின. தென்னிந்தியாவில் அக்காலத்தில் ஆரிய மொழியின் தாக்கம் அதிகமில்லாததால் தமிழ்க்குடும்பமொழி அங்கு தொடர்ந்து வழக்கத்திலிருந்தது. தொல் தமிழ்க்குடும்பமொழியின் தாய்மையும் தொடக்கமும் தமிழே!. அதன்பின் கன்னடமும் தெலுங்கும் கிளைத்தன. ஆனால் இவ்விரண்டு மொழிகளிலும் சமசுகிருதத்தின் தாக்கம் அதிகமாகவுள்ளது. 12- ஆம் நூற்றாண்டிற்குப் பின்பு தமிழிலிருந்து தோன்றிய மலையாள மொழியிலும் வட மொழியின் தாக்கம் அதிகமுள்ளது. ஆனால் தமிழர் மட்டும் வட மொழி ஆதிக்கத்தை ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக எதிர்த்து தமிழின் தனித்துவத்தைக் காத்து வருகின்றனர். ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழின் இலக்கியத் தொடர்ச்சி வியக்கத் தகுந்தது. அதனால்தான் அன்று எழுதப்பட்ட சங்கத் தமிழ் இன்றும் நம்மால் படித்துப் புரிந்து கொள்ள முடிகிறது. இந்த இலக்கியத் தொடர்ச்சி எம்மொழிக்குமில்லை என்பது வெறும்புகழ்ச்சியில்லை, உண்மை. இதற்குக் காரணம் நம் முன்னோர்களின் உழைப்பும் தமிழுணர்வுமாகும். தமிழ் மன்னர்கள் தங்களுக்குள் போரிட்டாலும் தமிழ்ப்புலவர்கள் தமிழுணர்வோடு மன்னர்களினிடையில் அமைதிக்காகப் போராடியுள்ளனர் என்பதை புறநானூற்றுப் பாடல்களில் காணலாம்.  (எ.கா. புறம் 27). அதியனுக்கு ஆதரவாக ஔவை மூவேந்தர்களிடம் பேசியது சங்கப் பாடல்களில் காண்கிறோம்.
  தமிழின் தொன்மையை அறிய மற்றுமொரு சான்று கி.மு. 2-ஆம் நூற்றாண்டில் காரவேல மன்னனின் புவனேசுவரம் நகர் (ஒரிசா மாநிலம்) அருகிலுள்ள உதயகிரி மலையிலுள்ள அதிகும்பா  கல்வெட்டுக்கள் (http://en.wikipedia.org/wiki/Hathigumpha_inscription). அக்கல்வெட்டுகளில் காரவேல, ’த்ரமிரா (தமிழ்) கூட்டரசைத் (confederacy)’ தோற்கடித்ததாக கூறப்பட்டுள்ளது.  இதை ஆய்ந்த அமெரிக்காவில் வாழும் முனைவர் சு. பழனியப்பன் அவர்கள் அகநானூற்றின் 31-ஆம் பாடலை மேற்கோள் காட்டித் தமிழர் கூட்டரசு இருந்ததை நிறுவியுள்ளார். மாமூலனார் எனும் சங்கப் புலவர் எழுதிய அப்பாடல், “தமிழ் கெழு மூவர் காக்கும் மொழி பெயர் தேஎத்த பல் மலை”. இப்பாடலில் மூவர் என்பது சேர, சோழ, பாண்டியரைக் குறிக்கிறது என்பது தெள்ளத் தெளிவு. இம்மூவரின் தமிழ்ப் படை வடக்குத் தமிழகத்தில் நிலை கொண்டு தமிழகத்தைக் காத்து வந்தது என்பது இப்பாடலின் மூலம் தெளிவாகிறது. பழனியப்பன் அவர்களின் ஆய்வைக் கீழ்க்கண்ட இந்தியவியல் குழுமத்தில் காணலாம்.
http://listserv.liv.ac.uk/cgi-bin/wa?A2=ind0908&L=INDOLOGY&P=R4899&I=-3
http://listserv.liv.ac.uk/cgi-bin/wa?A2=ind0908&L=INDOLOGY&P=R6548&I=-3

  மேலும் சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோ ஒரு தமிழ்த் தேசியவாதியாக வாழ்ந்துள்ளார் என்பது அவரது காவியத்திலிருந்து தெரிந்து கொள்ளலாம். சேரநாட்டில் பிறந்த அவர் சோழநாட்டையும், பாண்டிய நாட்டின் பெருமையையும் தம்நூலில் விவரித்துள்ளார். செக்கோசுலேவியால் பிறந்த பெரும் தமிழறிஞரான பேராசிரியர் கமில் சுவலபில் அவர்கள் சிலப்பதிகாரத்தைத் ‘தமிழில் எழுதப்பட்ட முதல் தமிழ்த்தேசிய நூல்’ என்று வருணித்துள்ளது கவனிக்கத் தக்கது. மேலும் அவர் எழுதிய ‘Smile of Murugan, The Tamil Literature’ என்கிற நூலில்,
“There is no “Dravidian” Literature per se. It is however entirely different with respect to Tamil Literature. It is of course only the earliest period of the Tamil literature which shows those unique features. But the early Tamil poetry was rather unique not only by virtue of the fact that some of its features were so unlike everything else in India, but by its literary excellence. There is yet another important difference between Tamil and other Dravidian literary languages: the meta language of Tamil has always been Tamil, never Sanskrit.
Tamil and Sanskrit cultures have shared with each other. The very beginnings of Tamil literature manifest clear traces of Aryan influence – just as the very beginnings of Indo-Aryan literature, the Rgvedic hymns, and show traces of Dravidian influence. On the other hand, there are some sharply contrasting features which are typical for Tamil classical culture alone, for the Tamil cultural and literary tradition as opposed to other non-Tamil tradition – and in this respect, Tamil cultural tradition is independent, not derived, not imitative; it is pre-Sanskritic, and from this point of view Tamil alone stands apart when compared with all other major languages and literatures of India”
 அமெரிக்காவில் பணியாற்றிய மற்றுமொரு பெரும் தமிழறிஞரான பேராசிரியர் அ.கி. இராமானுசன் அவர்கள் தமிழைக் குறித்து எழுதும் போது,
In most Indian languages the technical gobbledygook is Sanskrit; in Tamil the gobbledygook is ultra-Tamil. Tamil, one of the two classical languages of India, is the only language of contemporary India which is recognizably continuous with a classical past” என்கிறார்.
  அண்மையில் மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரிலுள்ள பொருந்தல் என்கிற ஊரில் புதை குழியொன்றில் பிராமி எழுத்துகள் பொறித்த பானையொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்கு இறந்தவருடன் புதைக்கப்பட்ட விலையுயர்ந்த மணிகள் போன்ற பல பொருள்களுடன் நெல்மணிகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அந்த நெல்மணிகள் கி.மு. 490-ஆம் ஆண்டைச் சேர்ந்தவை என்று ஒரு அமெரிக்க நிறுவனம் மூலம் அறியப் பட்டுள்ளது. இப்பானையில் தமிழ்ப் பிராமி எழுத்துக்களினால் ‘வயரா’ என்று எழுதியிருந்ததை வைத்துப் பார்க்கையில் பிராமி எழுத்துக்கள் அக்காலத்தில் புழக்கத்திலிருந்திருக்கின்றன என்பது தெளிவாகிறது. (http://www.thehindu.com/news/states/tamil-nadu/article2408091.ece) இக்கண்டுபிடிப்பினால் பிராமி எழுத்துகள் அசோகப் பேரரசனுக்குப் பின்பு தமிழகத்தில் புழக்கத்திற்கு வந்தது என்பது கேள்விக்குறியாகிறது.

  ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட சங்கப் பாடல்கள் மூலம் பழந்தமிழர் வாழ்வை நாம் தெளிவாக அறிய முடிகிறது. சாதி, மத வேறுபாடின்றி, எவ்வித ஏற்றதாழ்வுமின்றி தமிழர்கள் வாழ்ந்திருப்பதை நாம் காண முடிகிறது. தன்னேரிலாத தமிழ் மொழியை இன்று நாம் படிப்பதற்கு முதன்மைக் காரணம் தமிழ்ப் பெரியவர்கள் உ.வே.சாமிநாதைய்யரும் ஈழத்தைச் சேர்ந்த சி.வை. தாமோதரம் பிள்ளையவர்களும்தான். அதுவரை சங்க இலக்கியங்கள் தமிழ் அறிஞர்களால் அறியப்படாமல் இருந்தன. இவர்கள் காலத்திலும் தொடர்ந்தும் பல தமிழறிஞர்கள் சங்க நூல்களைப் பதிப்பித்து உரையெழுதியுள்ளனர்.
தமிழ்க்குடும்பமொழி குறித்த ஆய்வு கி.பி 1800-க்கு பின்புதான் தொடங்கியது. அதற்கு முன் அனைத்து மொழிகளும் (தமிழ் உட்பட) சமசுகிருதத்திலிருந்து தோன்றியதாகத்தான் அறிஞர்கள் கருதியிருந்தார்கள். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு போன்ற மொழிகள் தமிழ்க்குடும்பமொழியிலிருந்து தோன்றின என்கிற உண்மையை உணர்த்தியர்வர்கள் மேலை நாட்டு மொழியிலறிஞர்கள்தான். 1816-ஆம் ஆண்டு பிரான்சிசு எல்லிசு (Francis W. Ellis) அவர்கள் ஏ.டி.கேம்ப்பெல் (A.D. Campbell) அவர்களின் ‘A Grammar of the Teloogoo Language’ என்கிற நூலின் அறிமுகவுரையில் தமிழ்க்குடும்பமொழி மொழிகளைக் குறித்து எழுதியுள்ளார்.  அவர் முதலில் தென்னிந்திய மொழிக்குடும்பம் என்று அழைத்தார்.  அதன் பின்பு 1856- ஆம் ஆண்டில் இராபர்ட்டு கால்டுவெல் என்கிற பாதிரியார் தனது வரலாற்றுச் சிறப்புமிக்க நூலான ‘A comparative Grammar of the Dravidian or South-Indian Family of Languages’ என்கிற நூலில் முதன் முறையாகத் தமிழ் மொழிக்குடும்பத்தைக் குறித்து எழுதி, தமிழ் முதலான தமிழ்க்குடும்பமொழிகள் சமசுகிருதத்திலிருந்து தோன்றவில்லை. இவையொரு தனி மொழிக் குடும்பம் என்று உலகிற்கு உணர்த்தினார். (Preface of ‘A Dravidian Etymological Dictionary’ by T. Burrow and M.B. Emeneau).
  தமிழ் மொழிக்கு மேலை நாட்டு அறிஞர்கள் செய்த தொண்டு சிறப்பு மிக்கது. அவர்கள் தமிழை அறிவியல் பூர்வமாக, மொழியியல் அடிப்படையில் ஆய்ந்து தமிழுக்குச் சிறப்பு சேர்த்துள்ளனர். இராபர்ட்டு கால்டுவெல், அருட்தந்தை சி.உ.போப்பு( G.U.Pope), பேராசிரியர் கமில் சுவலபில், பேராசிரியர் அ.கி. இராமானுசன், பேராசிரியர் சியார்சு அருட்டு (George Luzerne Hart), முனைவர் சு. பழனியப்பன் மற்றும் பலருக்கு நாம் கடமைப் பட்டுள்ளோம். அவர்களுடன் தமிழகத்தில் தமிழைக் காக்க உழைத்த மறைமலை அடிகள், தேவநேயப் பாவாணர், திரு.வி.க, இலக்குவனார், பெருஞ்சித்திரனார் போன்ற ஆயிரக்கணக்கான அறிஞர்களுக்கு நாம் செய்யும் கடமையொன்றே. தன்னேரிலாத தேனினும் இனிய தமிழை நாமும் கற்று அடுத்த தலைமுறைக்கு தமிழிலக்கியத்தை எடுத்துச் செல்வதுதான் அது.
  கடந்த 30 ஆண்டுகளில் பல்வேறுக் காரணங்களினால் நல்ல தமிழறிஞர்கள் தமிழகத்தில் தோன்றுவது பின் தங்கி விட்டது. அதற்கு அரசும் ஒரு காரணம் என்று கூறுவதில் தவறேதுமில்லை. மீண்டும் தமிழை அரியணையிலேற்றி அதை மேம்படுத்துவது நம் கடமை. அதற்கான பணியை நாம் தமிழுணர்வாளர்களுடனும், தமிழ் நாட்டிலும் மேலை நாட்டிலும் வாழும் தமிழறிஞர்களுடனும் இணைந்து செயல்பட்டு உருவாக்க வேண்டும்.
க.தில்லைக்குமரன்
நவ.30, 2011
முத்திரை-சிறகு :muthirai_chiraku_siragu
(கமில் சுவலபில்)
(கமில் சுவலபில்)
(ஏ.கே.இராமாநுசன்)
(ஏ.கே.இராமாநுசன்)