அழை-சூழலியல் சந்திப்பு - azhai_suuzhaliyalchanthippu
 
 சவ்வாது மலைச் சிற்றூர்கள் – பல்லுயிர்ச் சூழல் – நினைவூட்டல்

15  ஆண்டிற்கு முன் வீட்டுக்கு முன் இரண்டு பெரிய வேப்ப மரமும், பெரிய வட்டக் கிணறும், மல்லிகைப் பூந்தோட்டமும்,  இருக்கும்; மழை பெய்தால்  இரவு முழுவதும் தண்ணீர் வாய்க்காலில் ஓடும்  ஒலி கேட்டுக்கொண்டே இருக்கும். இப்படி ஒவ்வொருத்தருக்கும் தங்களுடைய ஊரைப்பற்றின பழைய  நினைவு இருக்கும்.
ஆனால், இப்பொழுது, இந்த இடம் அவ்வளவு பசுமையாக இருந்தது என்று சொன்னால் யாரும் நம்புவதில்லை. குறைந்தஅளவு பசுமையைக் கண்ணில் பார்ப்பதற்கும் துய்ப்பதற்கும் இருக்கிற கடைசிக் கட்ட வாய்ப்பு மலைச்சிற்றூர்கள்தாம்.
அப்படியான மழைப் பகுதிகளில்  மிகவும் முதன்மையானதும் தொன்மை வாய்ந்ததும் சவ்வாது மலையும் அதை ஒட்டி அமைந்து இருக்கிற ஊர்களும்தான். சிறு தானியங்களும், விதவிதமான பழ வகைகளும்தான் அவர்களின்  உணவில்  முதன்மையாக இருந்தது.
சவ்வாது மலை முழுக்கப் பரவி இருக்கிற மேடு,பள்ளமான இந்த நிலப்பரப்பை பெரிய பெரிய இயந்திரங்களை வைத்துச்  சமதளமாக மாற்றி இருக்கிறார்கள்.  அவற்றில் மக்காச் சோளம், குச்சிக் கிழங்கு என்று பணப் பயிராக விளைய வைக்கிறார்கள். அதற்கு வேதியல் உரம், பூச்சிக் கொல்லிகள் என்று  அனைத்து வகையான சீர்கேடுகளையும் பயன்படுத்துகிறார்கள்.
சிறு தானியங்களைப் பயிரிடுவதைக் குறைத்து விட்டார்கள். அந்தக் குறைஞ்த அளவு விலையிருப்பதையும்   மாச்சில்(பிசுகட்டு) நிறுவனத்தானுக்கும் பெரு நகரங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி விடுகிறார்கள். இந்த  மக்களோ உணவுப்பங்கீட்டுக் கடை மூலமாகக் கிடைக்கிற அரிசியையும்,கோதுமையையும் தங்களுடைய உணவாக மாற்றிக்கொண்டார்கள்.
நகரத்தில் இருந்து கொண்டு வெறி கொண்டு பணம் சம்பாதித்த எல்லாரும், ஒரு கட்டத்தில் உடம்பும் மனமும் நல்ல படியாக  இல்லை என்றால் ஒன்றுக்கும் பயனில்லை என்று ஊரைப் பார்த்துத் திரும்பிக் கொண்டு இருக்கிற இந்த  நேரத்தில், இதை விட நாலு மடங்கு வேகமா நம் சிற்றூர் மக்களும் மலைப்பகுதிப் பூர்வக் குடி மக்களும் பணத்தையும், நுகர்வு வாழ்க்கையையும் நோக்கி வேகமாக ஓடிக் கொண்டு இருக்கிறார்கள்.
நம் குழந்தைகளைப்பற்றிக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். இந்தப் பணத்தை நோக்கி ஓடுகிற வாழ்க்கைச் சுழற்சியை நம் அளவில் தடுத்து நிறுத்த முடியாது. இது ஒரு சுழற்சி என்று நம் மக்களுக்கு நாம்  புரிய வைக்க வேண்டும். அதற்கான முயற்சிதான் இந்தச்சுழலியல் சந்திப்பு.
முழுக்க நினைவூட்டல்தான் இந்த சந்திப்பின் நோக்கம். நம்முடைய  பரம்பரைய வாழ்வியலை அதில் இருந்த அறத்தை, ஆறுதலை(நிம்மதியை) மக்களிடம் பகிர்ந்து கொள்ளப் போகிறோம். இது அவர்கள் இழந்த வாழ்க்கையை மீண்டும்  நினைவுகூர்வதற்கான பயணம்.
கலந்துரையாடல், திரையிடல், நாடகம், இப்படிச் சூழலுக்கு ஏற்ற வடிவங்களில் மக்கள்- குழந்தைகளிடம் போகிறோம்.

தை 15 – தை 24, 2047 / சனவரி 29 முதல் பிப்பிரவரி 7 வரை . நெல்லி வாசல்,நெல்லிப் பட்டு, புதூர் நாடு, தகரப் குப்பம்  முதலான மலைச் சிற்றூர்களில்.
தொடர்புக்கு : 9942118080,9994846491,9500125125
வடிவமைப்பு : @thiagu clicks