தமிழ்ப்புலவர்கள் இயற்கை நுணுக்கம் அறிந்தவர்கள்

  இனிப்பண்டைக்காலத்துச் செந்தமிழ்ப் புலவரெல்லாரும் உலக இயற்கைத் திறம் பிறழாமல், அதனை ஆராய்ந்து பாட்டுப்பாடும் மனவுறுதி மிகுதியுமுடையராயிருந்தனர். உலக இயற்கையிற் காணப்படும் ஒளிவிளக்கத்தையும் எழிலையும் மிக வியந்தனர். தம் மனவுணர்விற்கு இசைந்தவண்ணமெல்லாம் உலக இயற்கையினைத் திரித்துக் கூறாமல், அவ்வுலக இயற்கையின் அழகின் வழியே தமதறிவினைப் பொருந்த வைத்துத் தம் நினைவினை விரிவு செய்து விளக்கி மகிழ்ந்தனர். இம்முறைமை நற்பெரும் புலவர்க்கு இன்றியமையாச் சிறப்பினதாம் என்னுங் கருத்துப் பற்றியே இரசிகர் 0 என்னும் ஆங்கில மொழி உரைவல்ல ஆசிரியர், காட்டு என்ற புலவரைப் பற்றிச் சொல்ல வந்தவிடத்து “அவர் தமதுணர்வின் வழியே உலக இயற்கையினை நிறுத்திக்கொள்ளாமல், அவ்வுலக இயற்கையின் வழியே தமது உணர்வினை நிறுத்தி நின்றார்” என்று புகழ்ந்தெடுத்துக் கூறினார். ஆகவே, உலக இயற்கையின் வழி நின்று பாட்டுப் பாடுதலே அருமையாமென்பதும், அதுவே நல்லிசைப் புலவர்க்கு அடையாளமாம் என்பதும் இதனால் நன்கு பெறப்படும். பழந்தமிழ்ப்புலவர்களெல்லாரும் இந்நுணுக்கம் இனிதறிந்து விளங்கினார்களென்பதற்குப் பழைய தமிழ்ப் பாட்டுக்களே சான்றாகும்.
-தமிழ்க்கடல் மறைமலையடிகள்: முல்லைப்பாட்டு
ஆராய்ச்சியுரை: பக்கம். 28
maraimalaiadigal_mullaippaattuaaraaychiyurai_attai