ஞாயிறு, 29 ஜூன், 2014

ஆலூக்காசு வழக்கு: குடந்தை த.தே.பொ.க. தோழர்கள் விடுதலை!


குடந்தை த.தே.பொ.க. தோழர்கள் விடுதலை!

குடந்தை மலையாள ஆலூக்காசு வழக்கு:

குடந்தை த.தே.பொ.க. தோழர்கள் விடுதலை!

முல்லைப் பெரியாறு அணை உரிமையை மறுத்து, கேரளாவில் தமிழர்களைத் தாக்கிய மலையாளிகளுக்கு   எதிரடி கொடுக்கும்வகையில் கடந்த 2011ஆம் ஆண்டு திசம்பர் மாதம், தமிழகமெங்கும் மலையாள நிறுவனங்களை முற்றுகையிட்டு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி போராட்டம் நடத்தியது.
அதன் ஒரு பகுதியாக, தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் (கார்த்திகை, 2045 /07-11-2011 அன்று) நடைபெற்ற மலையாள நிறுவனம் சோசு ஆலுக்காசு மறியல் போராட்டத்தின் போது, அக்கடை அடித்து நொறுக்கப்பட்டதாக, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நகரச் செயலாளர் தோழர் க.விடுதலைச்சுடர், தோழர்கள் இரவி (எ) செழியன், ம.முரளி, சிலம்பரசன், சம்புகன் ஆகியோரைக் காவல்துறை கைது செய்தது.
தோழர்கள் மீது பல கொடும்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவர்களை, திருச்சி நடுவண் சிறையில் அடைத்தது. பின்னர், பிணையில் வெளிவந்த தோழர்கள் வழக்கை நடத்தி வந்தனர்.
கும்பகோணம் தலைமை குற்றவியல் நடுவர் மன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கில் வழக்கறிஞர்கள் இரா.சங்கர், சி.சங்கர் ஆகியோரும், தஞ்சை மாவட்ட நீதிமன்றத்தில் த.தே.பொ.க வழக்கறிஞர் தோழர் கரிகாலன் ஆகியோரும் தோழர்களுக்காக நேர்நின்று வாதாடினர். பின்னர், இவ்வழக்கு கும்பகோணம் கூடுதல் தலைமைக் குற்றவியல் நடுவர் மன்றத்திற்கு மாற்றப்பட்டது.
இவ்வழக்கின் தீர்ப்பை 1206.2045 / 26-06-2014 காலை வழங்கிய நீதிபதி வ. பத்பநாபன், தோழர்கள் அனைவரையும் வழக்கிலிருந்து விடுவிப்பதாக அறிவித்தார்.
விடுதலையான தோழர்கள் அனைவருக்கும், நீதிமன்றத்தில் த.தே.பொ.க. சார்பில் வரவேற்பும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது. த.தே.பொ.க. நகரச் செயலாளர் தோழர் விடுதலைச்சுடர் வழக்கறிஞர்களுக்குப் பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.
பாராட்ட விழைவோர் தொடர்பிற்கு:
தோழர் விடுதலைச்சுடர், 94437 04375
viduthalaichuda+release01
தலைமைச் செயலகம், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி



 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக