சனி, 17 டிசம்பர், 2011

Archaeological evidence of thamizh (tamil) in Turkey: துருக்கி வரலாறு காட்டும் தொல் தமிழ்ச் சான்று


துருக்கி வரலாறு காட்டும் தொல் தமிழ்ச் சான்று

சேசாத்திரி
பதிவு செய்த நாள் : 17/12/2011



மாந்தர் அறிவு விளக்கம் தெளியப்பெற்று வந்ததன் காரணமாக தம் உயிர் வாழ்க்கையின் முயற்சிகளை எளிமையாக்கவும் அவை இடையறாது தொடரவும் மெல்லமெல்ல பல பொருள்களையும், கருவிகளையும் உருவாக்கினர் வேட்டைக் குமுகமாக இருந்த மக்கள் இனத்தார். இந்த பொருள்/கருவிப் பயன்பாடே மாந்தரை விலங்கினத்தினின்று நாகரிகம் பெற்றவராய் ஆக்கி வேறுபடுத்துகின்றது.
உலகின் பல ஆற்றோரங்களில் மக்கள் எய்திய நனிஉயர் நாகரிகத்தின் எச்சங்கள் கடந்த 200 ஆண்டுகளாய் வெளிப்பட்டு வரலாற்றில் பதியப்பெற்று வருகின்றன. இந்த நகர நாகரிகங்கள் பல சற்றொப்ப 9,000 ஆண்டுகள் பழமையனவாய் அறியப்பட்டு உள்ளன. உலக மக்கட் தொகை 6,000 ஆண்டுகள் அளவில் சற்றொப்ப நாற்பது இலட்சம் தான் என அறிஞர்கள் விளம்பி உள்ளனர். இப்படி உலக மக்கட் தொகை குறைவாகவும், இன்று போல் சாலை வசதி ஏதும் இல்லாத அக்கால நிலையில் ஆப்பிரிக்காவின் எதியோபியா, இலிபியா, எகிபது இராக்கு, போனீசியா அடங்கிய மேற்கு திசை நாடுகளில் அமைந்த தொல் நாகரிகங்களுக்கும், நடுவே தென் ஆசியாவில் அமைந்த சிந்து நாகரிகத்திற்கும், தொலை கிழக்கே அமைந்த கொரிய, சப்பான் நாகரிகங்களுக்கும் இடையே ஒத்த பல பண்பாட்டுக்கூறுத் தொடர்புகள் அறியப்பட்டுள்ளன. சிறப்பாக, ஒத்த வடிவமைப்பு கொண்ட மட்கலன்கள், அங்கு கிட்டிய சிந்து எழுத்தை ஒத்த பானைஓட்டு எழுத்துகள் இவை ஒரு அறிவார்ந்த நாகரிகம் வாய்ந்த ஒரு தனி இடத்தை தாயகமாகக் கொண்ட மூல நாகரிக மக்கள் இந்நாடுகளின் ஆற்றோரத்தே குடியேறி அங்கிருந்த பழங்குடிகளோடு ஒருங்கு கூடி இந்நகர நாகரிகங்களை ஏற்படுத்தி இருத்தல் வேண்டும் என்று முடிபு கொள்ளத் தூண்டுகின்றது. சாலை வசதி இல்லா சூழலைக் கருத்தில் கொண்டு இம்மக்கள் சிறந்த கடலோடிகளாய் இருந்ததாலேயே இவர்கள் மேற்கும் கிழக்குமாக தொலைவாக விரிந்த பல நாட்டின் பகுதிகளில் அமைந்த ஆற்றோரங்களில் குடியேறி இந் நாகரிகங்களைத் தோற்றி இருக்க இயலும் எனலாம். இந்த சுற்றுக் கடலோடிகள் தம் அறிவை அங்கத்து மக்களுடன் பகிர்ந்து பொதுவான ஒரே மனித குமுகாயத்தை (one human society) உருவாக்கினர் என்று கூறினால் அது மிகை அல்ல.
மேற்சொன்ன கருத்துக்கு வலுசேர்க்கும் வகையில் மதங்கள் தோன்றிப் பரவாத அக்காலத்தே ஒரு நாகரிக ஆட்சியாளர் பெயர்கள் மற்ற பிற நாகரிக அரசர் பெயர்களுடன் பெரிதும் ஒத்துப் போகும்படி அமைந்து உள்ளன என்பது வியப்பிற்குரிய செய்தி. அதிலும் இப்பெயர்கள் தமிழாய் இருப்பது இந்நாகரிகங்களை தோற்றிய அந்த மூல நாகரிக மக்கள் தமிழர் என்பதை தெளிவாய்க் காட்டி நிற்கின்றன. இதனால் தமிழின் தொன்மை 6,500 ஆண்டுகளுக்கு மேம்பட்ட பழமையது எனத் தெரிகின்றது. இதற்கு காட்டாக விளங்கும் ஒரு நாகரிகம் தான் இன்றைய துருக்கியின் ஆட்சிப் பரப்பிற்கு உட்பட்டுள்ள பண்டைய அனதோலியா, சின்ன ஆசியா (Asia Minor) அரசுகள். இக்கட்டுரையில் இங்கு ஆண்ட இதைத்து, உறற்றியன், இலிதியன் அரசுகளின் மன்னர் பெயர்கள் தமிழ் இலக்கியப் பெயர்கள், தமிழக ஊர்ப் பெயர்கள் மற்றும் பிற நாகரிக மன்னர் பெயர்களுடன் ஒப்பிட்டு அவற்றின் ஒத்ததன்மை ஒலி அடிப்படையில் ஆயப்படுகின்றது. அதோடு, பேரா. இரா. மதிவாணன் Indus script Dravidian (IsD), 1995, எனும் பெயரில் படித்து வெளியிட்ட நூலில் இடம் பெறும் சிந்து முத்திரைப் பெயர்களும் இந்த ஒப்பாய்வில் எடுத்துக் காட்டப்பட்டு உள்ளன.
இவை தமிழல்ல என மறுத்து சர்ச்சை புரிவோருக்கு
தெளிவு ஏற்படுத்த தமிழ்-பிராமி கல்வெட்டுகள் எனும் நூலில் இடம் பெறும் ஒத்த பெயருடைய கல்வெட்டு குறிப்புகள் மேற்கோளாகத் தரப்பட்டு உள்ளன.
இம்மன்னர் பெயர்கள் பேரனுக்குப் பாட்டன் அல்லது மூதாதைப் பெயர் என்ற அடிப்படையில் திரும்பத் திரும்ப பட்டியலில் பதிவாவதால் இம்மன்னர்களுக்கு இன்னும் சில ஆயிரம் ஆண்டுகள் முன்னே அங்கு தமிழர் குடியேறி இருந்தால் மட்டுமே தமிழ்ப் பெயர்கள் வழிவழியாக தொடர்ந்து வர வாய்ப்பு உள்ளது என்ற கருத்தைச் சார்ந்து, இத்தமிழ் முன்னோரை முன் வைத்து தமிழ் மொழி, தமிழரின் பழமையை இக்கட்டுரை அணுகுகின்றதே அன்றி இம்மன்னர்கள் தம் குடும்பம், சுற்றத்தாரொடு தமிழில் அளவளாவினர் எனும் பார்வையில் இந்த ஒப்பாய்வை அணுகவில்லை. அதற்கு ஏதொரு சான்றையும் முன் வைக்கவில்லை என்று தெளியலாம். தமிழ் மொழி, தமிழர் பழமை என்ற அளவிலேயே மட்டுப்படுகின்றது இந்த மன்னர் பெயர் ஒப்பாய்வு.
மூல நாகரிகத் தமிழர் உலகின் ஆற்றோர நாகரிகத் தளங்களுக்கு பரவும் காலத்தே தமிழில் ஆண் பால் ஒருமை சுட்டும் ‘அன்’ ஈறு தோன்றி இருக்கவில்லை. சற்றொப்ப 6,500 ஆண்டுகள் அளவில் தான் அன் ஈறு வழக்கிற்கு வந்திருக்க வேண்டும். சிந்து நாகரிக முத்திரைகளில் அன் ஈறு தெளிவாகப் பதியப்பட்டு உள்ளன. ஆனால் அனதோலியா உள்ளிட்ட மேற்றிசை நாகரிகங்களில் அன் ஈறுக்குப் பகரமாக ‘S’ ஈறு பொதுவாகப் பயின்றுள்ளது. இது கீழை நாகரிகங்களில் காணப்படுவதில்லை என்பது நோக்கத்தக்கது. மேலும், சில பெயர்களில் அன் ஈற்றின் இடத்தை அல், அர், அம், கன், மன், இகர, உகர, ஐகார ஈறுகள் பிடிக்கின்றன. இவற்றையும் கருத்தில் கொண்டால் மட்டுமே இந்த ஒப்பாய்வு பொருள்பட விளங்கும் அல்லாக்கால் இடர்பட்டு ஏளனத்திற்கு வழி கோளும்.
இனி, மன்னர் பெயர் ஒப்பாய்வு தனித் தனிப் பெயராக ஆட்சி ஆண்டு முன்மை வரிசைப்படி செல்லும்.
Hittites Kings 1660 – 1190 BCE
Old Kingdom 1660 – 1460 BCE
Pithana ( Pit(k)hana ) Early 18th C. BCE தமிழில் பிட் கான > பிட்டன் கானன் என செப்பமாகப் படிக்கலாம். பிட்டன் – புகளூர் தமிழி கல்வெட்டு 20:5 “நலி(ய்) ஊர் ஆ பிடன் குறும்மகள் கீரன் கொறி செயித பளி” இதை நல்லி ஊர் ஆ பிட்டன் குறுமகள் கீரன் கொற்றி செய்த பள்ளி என ஒற்றெழுத்து சேர்த்து செப்பமாக்கலாம். புறம்; பாடல் 172 பிட்டன் கொற்றன் எனும் குறுநில மன்னனைக் குறிப்பிடுகின்றது. இகர ஈறு கொண்டு பிட்டி என்றும் ஆகும். சீனத்து Liaoxi இன் குறுநில மன்னன் ஒருவன் பெயர் Duan Pidi 318 – 321 AD – தமிழில் துவன் பிட்டி என்பது. கானன் – சிந்து முத்திரை M2305 இல் பதிவான பெயர், IsD பக்.87.
Anitta Mid 18th C. BCE – தமிழில் அனித்தன் > அன்னி இத்தன் என செப்பமாக படிக்கலாம். அன்னி – அகநானூறு பாடல் – 45 இல் குறிக்கப் பெறும் மன்னன் பெயர். ஒரு சப்பான் மன்னரது ஈமப்(Posthumus) பெயர் Annei 549 – 511 BCE > தமிழில் அன்னி என படிக்கலாம். இத்தன் – சிந்து முத்திரை M2148 இல் பதிவான பெயர் IsD பக்.122. மற்றொரு சப்பான் மன்னரது ஈமப் பெயர் Itoku 510 – 476 BCE > தமிழில் இத்தக்கு > இத்தன் அக்கு என செப்பமாக்கலாம். சப்பானில் அகரம் இயல்பாய் ஒகரமாய்த் திரியும்.
Labarnas 1680-1650 BCE – தமிழில் இள பரணன் என்பது செப்பமான வடிவம். இள – இளமை பொருள். இள என்பதில் இகரத்தை விட்டுக் குறிப்பது பண்டைய தமிழர் எழுத்து வழக்கு. அதற்கு இரு தமிழி கல்வெட்டுச் சான்றுகள் உள. ஒன்று புகளூர் கல்வெட்டு 20:7 “கொற்றந்தை (இ)ளவன் முன்று”, மற்றொன்று மன்னார் கோவில் கல்வெட்டு 30:2 “குணாவின் (இ)ளங்கோ செய்பித பளிஇ”. ஈலம் நாகரிக மன்னன் பெயரில் இவ் வழக்கு பயில்கின்றது. அது Chedor laomer > தமிழில் சித்தர் இள ஓமர் > சித்தன் இள ஓமன் என்பது செப்ப வடிவம். பரணன் – சங்க இலக்கியப் புலவர் பெயர்.
Hattusili I 1650-1620 BCE – தமிழில் காத்து சிழி > காத்தன் சிழிவன் என செப்பமாகப் படிக்கலாம். காத்தன் – சிந்து முத்திரை H3114 இல் பயிலும் பெயர் IsD பக். 109. ஒரு சப்பான் மன்னரது இயற் பெயர் Kotohito 1611 – 1629 AD > தமிழில் காத்தன் கித்தன் என்பது. சிழிவன் – அரிட்டாப்பட்டி தமிழி கல்வெட்டு 2:1 இல் வழங்கும் பெயர், “நெல்வெளிஇய் சிழிவன் அத்தினன் வெளியன் மூழாகை கொடுபிதோன்” இதை நெல்வெளி சிழிவன் அத்தின்னன் வெளியன் முழாகை கொடுப்பித்தோன் என செப்பமாக்கலாம். அன் ஈறு ஒழிந்து சிழி(லி) என்று நிற்கின்றது.
Mursili I 1620-1590 BCE – தமிழில் முர சிழி > முரங்கன் சிழிவன் என படிக்கலாம். முரங்கன் – சிந்து முத்திரை M1397 இல் பயிலும் பெயர், IsD பக். 244. சீனாவின் Yan பேரரசின் (337 – 410 AD) முந்து, பிந்து, தெற்கு அரசுகளின் மன்னர்கள் அனைவரும் தம் பெயர் முன்னே Murong என்பதை பட்டப் பெயராக கொண்டுள்ளனர். சப்பானில் Nakamura, Murayama என்ற பெயர்களில் முர உள்ளது. சிழிவன் – விக்கிரமங்கலம் தமிழி கல்வெட்டு 8:2 இல் பயில்கின்றது, “எம்ஊர் சிழிவன் அதன்தியன்” இதை எம்மூர் சிழிவன் ஆதன் திய்யன் என் ஒற்றெழுத்து இட்டு செப்பமாக்கலாம்.
Hantili I 1590-1560 BCE – தமிழில் கான் தில்லி > கானன் தில்லன், தில்லமன் என படிக்கலாம்.கானன் – பள்ளங்கி எனும் இடத்து ஒரு மாயன் நாகரிக மன்னன் பெயர் K’an Joy Chitam (K’an Xul I), 529-565 CE – தமிழில் கான் சாய் கித்தம் > கானன் சாயன் கித்தன் என செப்பமாகப் படிக்கலாம். சாயன் – சிந்து முத்திரை M428இல் பதிவாகி உள்ளது, IsD பக்.116. திருப்பரங்குன்றம் தமிழி கல்வெட்டு 16:3 இல் பயிலும் பெயர் “எரு காடுர் இழ குடும்பிகன் போலாலயன் செய்தா ஆய்சயன் நெடுசாதன்” இதை எருகாடூர் ஈழ குடும்பிகன் போலாலயன் செய்த ஆய் சாயன் நெடு சாத்தன் என செப்பமாக்கலாம். கித்தன் – சப்பான், ஈலம் மன்னர் பெயர்களிலும் வழங்குகின்றது. தில்லன் – ஒரு பழந்தமிழ்ப் பெயர். கிரேக்க அறிஞர் ஓமரின் இலியத்து புகழ் திராய் நகரை ஆண்ட ஒரு மன்னன் பெயர் Telamon > தமிழில் தில்லமன்.
Zidanta I 1560-1550 BCE – தமிழில் சித் அண்டன் > சித்தன் அண்டன் என செப்பமாகப் படிக்கலாம். சித்தன் – அறிவன் எனப் பொருள்படும் ஆன்றோரைக் குறிக்கும் சொல் இங்கு பெயர் ஆகியது. அண்டன் – சிந்து முத்திரை H3135 இல் பயிலும் பெயர், IsD பக்.131. ஒரு சப்பான் மன்னரது ஈமப் பெயர் Antoku 1180 – 1185 AD > தமிழில் அண்டன் அக்கு என்பது.
Ammuna 1550-1530 BCE – தமிழில் அம்மு உன்ன > அம்மன் உன்னன் என செப்பமாகப் படிக்கலாம். அம்மன் – மேலை ஆசியாவில் கிட்டிய சிந்து முத்திரையில் இப் பெயர் உள்ளது. சேலத்தில் அம்மன் பாளையம் > அம்மம்பாளையம் என்ற ஊரில் சமத்துவபுரம் அமைக்கப்பட்டு உள்ளது. இப்பெயரில் அம்மன் உகர ஈறு பெற்று உள்ளது. உங்கி என்ற ஊரின் மன்னனாய் இருந்தவன் Tuta Ammu – தமிழில் துட அம்மு > துடன் அம்மன் என செப்பமாக்கலாம். உன்னன் – சிந்து முத்திரைப் K7124 இல் பயிலும் பெயர், IsD பக்.104. இகர ஈறுடன் இன்றும் உன்னி என கேரளத்தில் வழங்குகின்றது.
Huzziya I 1530-1525 BCE – தமிழில் கூழய்யன் என்பது செப்ப வடிவம். சிந்து முத்திரையில் பயிலும் பெயர். கூழ் என்பதற்கு பொன் என பொருள் கூறுகின்றது கள்ளர் வரலாறு. இப்பெயரில் தமிழுக்கே சிறப்பாக உரிய ழகரம் குறிக்கப்படுகிறது. க – ஹ என திரிந்துள்ளது.
Telipinu ( Telepinus ) 1525-1510 BCE – தமிழில் தில்லி பின்னு > தில்ல(ம)ன் பின்னன் என செப்பமாகப் படிக்கலாம். தில்லன் – ஒரு பழந்தமிழ்ப் பெயர். பின்னன் – புகளூர் தமிழி கல்வெட்டு 20:3 இல் பயின்றுள்ள பெயர், “யாற்றூர் செங்காயபன் தாவன் ஊர்ப் பின்அன் குற்றன் ன் அறுபித்த அதிட்டானம்” இதை யாற்றூர் செங்காயபன் தாவனூர் பின்னன் கூற்றன் அறுப்பித்த அதிட்டானம் என செப்பமாக்கலாம். இங்கு பின்னன் உகர ஈறு பெற்றுள்ளது. இகர ஈறு பெற பின்னி என்றாகும்.
Alluwamna 1510-1500 BCE = தமிழில் அள்ளு வண்ண > அள்ளன் வண்ணன் என செப்பமாகப் படிக்கலாம். அள்ளன் – முத்துப்பட்டி தமிழி கல்வெட்டு 17:2 இல் பயிலும் பெயர். “சைய்அளன் விந்தை ஊர் கவிய்” இதை சைய்அள்ளன் விந்தையூர் கவி என செப்பமாக்கலாம். மேலை ஆசிய சிந்து முத்திரை 9301 இல் பயிலும் பெயர், IsD பக்.202. வண்ணன் – சிந்து முத்திரை M314a இல் பயிலும் பெயர். தமிழுக்கே சிறப்பாக உரிய ணகரம் mna என குறிக்கப்படுவதை நோக்குக. கொரியாவின் சில்லா வழிவந்த மன்னன் ஒருவன் பெயர் Wonseong 785-798 AD > தமிழில் வண்(அன்) சேயன். சீனத் தாக்கத்தால் ‘ன்’ > ‘ங்’ஒலி பெற்றது. அரச்சலூர் தமிழி கல்வெட்டு 29:1 இல் பயிலும் பெயர், “எழுத்தும் புணருத்தான் மலைய் வண்ணக்கன் தேவன் சாத்தன் ” இப்பெயரை வண்ணன்+அக்கன் என பிரித்து தெளியலாம்.
Great Kingdom 1460 – 1190 BCE
Tudhaliya II 1460-1440 BCE – தமிழில் துட் கலிய > துடன் கலியன் என செப்பமாக படிக்கலாம். க – ஹ என திரித்துள்ளது. துடன் – ஒரு பழந்தமிழ்ப் பெயர். வடகிழக்கு ஈழத்தின் ஓர் ஊர்ப் பெயர் துடன்குளம். எகிபதின் 18 ஆம் ஆள்குடியின் மன்னன் பெயர் Thutmoses 1493 – 1481 B.C.> தமிழில் துட் மோசி > துடன் மோசி. அதே ஆள்குடியில் இன்னொரு மன்னன் பெயர் Tutan Khaman 1334-1325 BC > தமிழில் துடன் காமன் என்பது செப்ப வடிவு. கலியன் – திருமங்கை ஆழ்வார் தம்மை கலியன் என அழைத்துக் கொண்டார்.
Arnuwanda I 1440-1420 BCE – தமிழில் அரணு வண்ட > அரணன் வண்டன் என செப்பமாகப் படிக்கலாம். அரணன் – சிந்து முத்திரை H3266 இல் பயிலும் பெயர், IsD பக்.132. அரணன் இப்பெயரில் உகர ஈறு பெற்றுள்ளது. வண்டன் – சிந்து முத்திரை H3701 இல் பயிலும் பெயர், IsD பக்.104. இகர ஈறு பெற்று வண்டி என்றாகும் இப்பெயரில் சில தமிழ் ஊர்கள் வண்டிச் சோலை, வண்டிப் பெரியாறு என்பன.
Suppiluliama I 1380-1340 BCE – தமிழில் சப்பில் உளியமன் என்பது செப்ப வடிவம். சப்பில் – தோப்பில், கொப்பரஇல், அடுப்பரம்பில் என்று கேரளத்தில் மனையை சுட்டி ஒருவர் தன்னை அடையாளப் படுத்துவது போல் இதுவும் ஒரு மனைப் பெயர் ஆகலாம். உளியமன் – ஒரு பழந்தமிழ்ப் பெயர். உளியன் என்பதற்கு கரடி என ஒரு பொருள் தமிழில் உண்டு. சீனாவின் மேற்கு Xia அரசில் ஒரு மன்னனது ஈமப் (Posthumus) பெயர் Wǔlièdì 1032 – 1048 AD – தமிழில் உளி எட்டி என்பது.
Muwatalli II 1306-1282 BCE – தமிழில் மவ்வத்தள்ளி > மவ்வன் அத்தன் அள்ளி என்பது செப்பமான வடிவம். மவ்வன் – சிந்து முத்திரை H3750 இல் பயிலும் பெயர், Isd பக். 272. பள்ளங்கி எனும் இடத்து மாயன் நாகரிக அரசிக்குப் பெயர் Muwaan Mat (lady Beasties) 612 – 615 A.D. – தமிழில் மவ்வான் மத் > மவ்வான் மத்தி என செப்பமாக்கலாம். அத்தன் – சிந்து முத்திரைகளில் அப்பன், அண்ணன்,அய்யன் என்பது போல மதிப்படைச் சொல்லாக பயிலும் பெயர், காட்டாக, அரட்டத்தர் M136, IsD பக். 91. அள்ளி – அள்ளன் என்பது இகர ஈறு பெற்று அள்ளி என்றாகியது. காண்க முத்துப்பட்டி தமிழி கல்வெட்டு 17:2.
Mitanni Kings 1500 – 1245 BCE
Kirta 1500-1490 BCE – தமிழில் கீற்றன் என்பது செப்ப வடிவம். கீற்று ஒளிக்கதிரைக் குறிக்கும் சொல். எதியோபிய நாகரிகத்தில் ஒரு மன்னன் பெயர் Elektron 2515 – 2485 BC – தமிழில் எல்லி கீற்றன் என்பது செப்பமான வழக்கு. எல்லி – ஞாயிறு. பண்டு றகரம் டகர ஒலி பெற்றிருந்தது நோக்குக.
Baratarna 1470 – 1450 BCE – தமிழில் பரத அரண > பரத(வ)ன் அரணன் என எப்பமாகப் படிக்கலாம். பரத(வ)ன் – மீனவர் சங்க இலக்கியங்களில் பரதவர் எனப்படுகின்றனர். அரணன் – சிந்து முத்திரை H3266 இல் பயிலும் பெயர்.
Parsatatar 1450-1440 BCE – தமிழில் பரசு அட்டத்தர் > பரசு அட்டத்தன் என செப்பமாகப் படிக்கலாம். பரசு – ஒரு பழந்தமிழ்ப் பெயர். சமணம் தோன்றுவதற்கு முன்பே இப்பெயர் இருந்தது என்பதற்கு இம்மன்னன் சான்று. இராசத்தானில் Parasmal என்ற பெயர் வழங்குகின்றது. இனி, திருவாதவூர் கல்வெட்டு 3:2 இல் இப்பெயர் பதிவாகி உள்ளது. “உபசன் பர்அசு உறை கொட்டுபிதோன் ” இதை உபசன் பரசு உறை கொடுப்பித்தோன் என செப்பமாக்கலாம். பரசு என்பதற்கு தமிழில் பாடுதல் எனும் பொருள் திருவாய்மொழியில் உள்ளது. அட்டத்தர் (அட்டன் +அத்தன்) – சிந்து முத்திரை M208 இல் பயிலும் பெயர்,IsD பக்.96. ஈலம் நாகரிகத்தில் ஒரு மன்னன் பெயர் Attar Kittah II 1370 BCE – தமிழில் அத்தர் கித்த > அத்தன் கித்தன் என்பது.
Artatama 1410-1400 BCE – தமிழில் அரட்ட தாம > அரட்டன் தாமன் என செப்பமாகப் படிக்கலாம். அரட்டன் – சிந்து முத்திரை M157 இல் பயிலும் பெயர்,IsD பக்.154. இது ஆனைமலை தமிழி கல்வெட்டு 19:1 இல் பதிவாகி உள்ள பெயர், “இவகுன்றது உறையுள் பாதந்தான் ஏரி ஆரிதன் அத்துவாயி அரட்டகாயிபன்”. தாமன் – அல் ஈறு பெற்ற தாமல் ஏரி காஞ்சி மாவட்டத்தில் உள்ளது. திருவாவடுதுறை கோவிலில் திருநறையூர் நாட்டுச் சிற்றாடியான் தாமன் அம்பலவன் நமசிவாயன் படிமை செதுக்கப்பட்டு உள்ளது.
Artashumara 1385-1380 BCE – தமிழில் அரட்ட குமர > அரட்டன் குமரன் என செப்பமாகப் படிக்கலாம். குமரவில் ககரம் ஹகரம் ஆகியது. குமரன் – குமர குருபரர் ஒரு அடியார்.
Mattiwaza 1350-1320 BCE > தமிழில் மத்தி வாழன் > மத்தன் வாழன் என்பது செப்ப வடிவம். மத்தி – அக:211 இல் குறிக்கப்படும் ஒரு படைத் தலைவன் பெயர் மத்தி. ஒரு சப்பானிய மன்னரது இயற்பெயர் Motohito 1382-1392 AD > தமிழில் மத்தன் கித்தன் என்பது. பல சிந்து முத்திரைகள் அன் ஈறு இன்றி ‘மத்’ என்று மட்டும் உள்ளன. வாழன் – இன்றும் தமிழக ஊர்ப்புறங்களில் வழங்கும் பெயர் (காண்க வாக்காளர் பட்டியல் – வாழன், கணிவாழன்). இப்பெயரில் அமைந்த சில தமிழ் ஊர்கள் வாழக்குறிச்சி (நெய்வேலி), வாழச்சேர் (திருவாரூர்), வாழப்பாடி (சேலம்), வாழமங்கலம் (கந்தர்வக் கோட்டை).
Sattuara I 1320-1300 BCE – தமிழில் சாத்து அர > சாத்தன் அரயன் என செப்பமாகப் படிக்கலாம். சாத்தன் – சிந்து முத்திரை H3764 இல் பயிலும் பெயர், IsD பக்.99. சாத்தூர், சாத்தனூர் என சில தமிழக ஊர்ப் பெயர்களில் பயில்கின்றது. அரயன் – இதற்கு மன்னன் எனப் பொருள். வைணவ இலக்கியங்களில் பயில்கின்றது. இது சிந்து முத்திரை M721 இல் பயிலும் பெயர், IsD பக். 146. ஒரு எதியோபிய மன்னன் பெயர் Elaryan 4404-3836 BC – தமிழில் எல் அரயன் என்பது செப்பமான வடிவம்.
Vashasatta 1300-1280 BCE – தமிழில் வச சாத்தன் > வசன் சாத்தன் என செப்பமாகப் படிக்கலாம். வசன் – ஒரு பழந்தமிழ்ப் பெயர். ஐயர் மலை தமிழி கல்வெட்டு 14:1 இல் “பனைதுறை வெஸன் அதட் அனம்” என கொச்சை வழக்கில் இப்பெயர் குறிக்கப்பட்டுள்ளது. வசவு வெஸவு என கொச்சையாக வழங்குவதை நோக்குக. இதை பனைத்துறை வசன் அதிட்டானம் என செப்பம் ஆக்கலாம். சாத்தன் – ஒரு சப்பானிய மன்னனது இயற் பெயர் Sotohito 1663 – 1687 AD > தமிழில் சாத்தன் கித்தன் என்பது.
Urartian Kings 860 – 580 BCE
Aramu 860-840 BCE – தமிழில் அறமு > அறமன் என செப்பமாகப் படிக்கலாம். மன்னன் பெயர் உகர ஈறு பெற்றுள்ளது. அறமன் – சிந்து முத்திரை M2490 இல் பயிலும் பெயர், IsD பக். 152. பதிவான முதல் எதியோபிய மன்னன் பெயர் O r i or Aram 4530-4470BCE – தமிழில் ஓரி அல்லது அறம் என்பது செப்பமான வடிவம். தங்கன் வழிவந்த ஒரு கொரிய மன்னன் பெயர் Orumun 795 – 772 BCE – தமிழில் அறமன் என்பது. அன் ஈறு தெளிவாக கொண்டுள்ளது இப்பெயர். கொரியத்தில் முதல் எழுத்து அகரம் ஒகரமாக காட்டப்பட்டு உள்ளது.
Ishpuinis 830-810 BCE – தமிழில் ஈச பூய் இன்னி > இயன் பூயன் இன்னன் என்பது செப்பமான வடிவம். இயன் – சிந்து முத்திரை H3384 இல் பயிலும் பெயர், IsD பக்.170. பூயன் – சுமேரிய ஊர் எனும் இடத்தில் கிட்டிய முத்திரையில் இப்பெயர் உள்ளது. இன்னன் – சிந்து முத்திரை M2527 இல் பயிலும் பெயர், IsD பக். 121. தமிழி அரிட்டாபட்டி கல்வெட்டு2:1 இல் அத்தின்னன் என்ற பெயரில் பதிவாகி உள்ளது.
Menua 810-780 BCE – தமிழில் மேன் உய்ய > மேனன் உய்யன் என செப்பமாகப் படிக்கலாம். இப்பெயரில் அன் ஈறுகள் கிடையா. மேனன் – மேல், மேன், மேற் ஆகிய வேர்கள் உயர்வுக் கருத்தை குறிப்பன. இவ்வேர்களில் சுமேரியா, எகிபது, எதியோபியாவில் சில மன்னர் பெயர்கள் உள்ளன. உயர்ந்த என்ற பொருளில் மேன என்ற சொல் தமிழ் இலக்கியங்களில் ஆளப்பட்டு உள்ளன. நாயரில் மேனன் என்பார் உயர் குடியினர் எனப்படுகின்றனர். உய்யன் – இதுவும் உயர்வுக் கருத்து கொண்டதே. சிந்து முத்திரை M2636 இல் பயிலும் பெயர்,IsD பக்.110. உய்யக் கொண்டான் என்பதை நோக்குக.
Rusa I 730-713 BCE – தமிழில் (இ)ருசன் என்பது செப்ப வடிவம். இன்றும் தமிழக ஊர்ப்புறங்களில் இருசன், இருசப்பன் ஆகிய பெயர்கள் வழங்குகின்றன. நுளம்ப அரசன் அய்யப்ப தேவன்(கி.பி. 900 – 932) கால தருமபுரி மாவட்ட ரெட்டியூர் நடுகல் கல்வெட்டு தரும் செய்தியில் இப்பெயர் பதிவாகி உள்ளது. அது, “ஸ்வஸ்தி ஸ்ரீ அய்யப்ப தேவன் நாடாள வேணுடுடைய இருசப்பையனார் அடியான் அரைய குட்டி பன்றி குத்தி பட்டான்”
Erimena 625-605 BCE – தமிழில் எரி மீனன் என்பது செப்ப வடிவம். எரி – தமிழில் எல் > எர் > எரி எனத் திரியும். இதற்குச் சிவப்பு, ஒளி எனப் பொருள் உண்டு. எரிபத்தர் 63 நாயன்மாருள் ஒருவர். எரி கல் முத்தரசு 575 A.D. ஒரு களப்பிர மன்னன். போனீசிய திரை நாகரிக மன்னன் பெயர் Eri Aku 1400 B.C. தமிழில் எரி அக் > எரி அக்கன் எனச் செப்பமாகப் படிக்கலாம். Tangun வழிவந்த கொரிய மன்னன் பெயர் Maereuk 704 – 646 B.C. தமிழில் மா எரி அக் > மா எரி அக்கன் எனச் செப்பமாகப் படிக்கலாம். மீனன் – தமிழில் மீன் விண் மீனையும், வெள்ளி போல் ஒளிரும் புறச்செதில் உள்ள நீர் வாழ் உயிரியையும் சுட்டும். இங்கு ஒளிரும் விண்மீன் போன்றவன் என்பதே இப்பெயருக்குப் பொருள்.
Lydian Kings 680-546 BCE
Gyges 680-652 BCE – தமிழில் கய்கி > கய்யன் நேர் வடிவம், கய்கன்,கய்மன் என்பன மாற்று வடிவம். இகர ஈறு பெற்று கய்கன் என்பது கய்கி ஆனது. கய்யன் – சிந்து முத்திரைப் பெயர், கய்கன் – வட கன்னட மாவட்டத்தில் கய்க(kaiga) எனும் இடத்தில் அணு மின் நிலையம் உள்ளது. ஒரு சப்பான் மன்னருடைய ஈமப் பெயர் kaika 157 – 98 BCE – தமிழில் கய்கன் என்பது. Gija வழிவந்த கொரிய மன்னர் பெயர் Gyeonghyo 1657 – 1030 BCE – தமிழில் கய்யங்கய்ய > கய்யன் கய்ய(ன்) என்பது, தங்கன் வழிவந்த ஒரு கொரிய மன்னன் பெயர் Haemo 971 – 943 BCE – தமிழில் கய்மன் என்பது, silla வழிவந்த ஒரு கொரிய மன்னன் பெயர் Hyogong 897 – 912 AD – தமிழில் கய்யகன். சீனத் தாக்கத்தால் அகரம் ஒகரமாய் திரிந்து உள்ளது.
Ardys 652-625 BCE – தமிழில் அரட்டி என்பது. அரட்டன் இகர ஈறு பெற்று அரட்டி ஆனது. மேல் உள்ள ஆனைமலை19:1 கல்வெட்டு மேற்கோளைக் காண்க.
Sadyattes 625-610 BCE – தமிழில் சடி அத்தி > சடிகன் அத்தி என்பது செப்பமான வடிவம். ஈறு பெறாமல் சடி என்ற அளவில் நின்று அத்தியுடன் புணர்ந்தது இப்பெயர். சடிகன் – மாங்குளம் தமிழி கல்வெட்டு 1:2 இல் பயிலும் பெயர். அது “கணிய் நந்தஸிரிய் குஅன் தமம் ஈதா நெடுஞ்சழியன் ஸாலகன் இளஞ்சடிகன் தந்தைய் சடிகன் சேஇய் பளிய் ” இதை கணி நந்தாசிரியன் குவன் தமம் ஈத நெடுஞ் செழியன் ஸாலகன் இளஞ்சடிகன் தந்தை சடிகன் செய் பள்ளி என செப்பமாக்கலாம். அத்தி – அகம்: 44 பாடலில் குடவாயிற் கீரத்தனார் அத்தி என்பானை குறிப்பிடுகிறார். சிந்து முத்திரைகளில் குறிக்கப்படும் பெயர்.
Alyattes 610-575 BCE – தமிழில் அள்ளி அத்தி > அள்ளன் அத்தி என்பது செப்பமான வடிவம். அள்ளன் – முத்திப்பட்டி தமிழி கல்வெட்டில் 17:2 சைய்அள்ளன் என்று பதிவாகி உள்ளது. அத்தி – அரிட்டாபட்டி தமிழி கல்வெட்டில் 2:1 அத்தின்னன் (அத்தி + இன்னன்) என பதிவாகி உள்ளது.
Croissos 575-546 BCE – தமிழில் குறு ஓய் சோ > குறு ஓயன் சோ என்று செப்பமாக படிக்கலாம். குறு – இளைய, சிறிய எனும் பொருள் உடையது. புகளூர் கல்வெட்டு 20:5 இல் குறும்மகள் என்ற சொல்லாட்சி உள்ளது நோக்குக. ஓயன் – சிந்து முத்திரை M2072 இல் பயிலும் பெயர், IsD பக். 160. ஓயமன் எனவும் வழங்கும். ஒரு சப்பான் மன்னரது இயற்பெயர் Ōama 672 – 686 AD – தமிழில் ஓயமன் என்பது. சோ – ஒற்றை எழுத்துப் பெயர். சிந்து முத்திரை M2705 இல் பயிலுகிறது, IsD, பக். 107. இப் பெயரில் உள்ள சில தமிழக ஊர்கள் சோவூர் (திருவண்ணாமலை), சோபட்டினம் (மரக்காணம்), சோமங்கலம் (காஞ்சிபுரம்).
துருக்கியின் வடமேற்கு கடற்கரையில் அமைந்து இருந்த இலியத்து காவியப் புகழ் திராய் (Troy) நகர அரசர் பெயரை குடும்ப வரிசைப்படி வழங்கும் தொகுப்பில் இடம் பெறும் சில தமிழ்ப் பெயர்கள் Phineus (பின்னி> பின்னன்), Calais (காளை), Capys(காப்பி), Pandion (பாண்டியன்), Ilus(இல்லன்), Laomedon (இளஓமிதன் > இள ஓமன் தன்னன்), Telamon (தில்லமன்), Tithonus (தித்தன்), Cycnus (கய்கன்) என்பன ஆகும். இவர்களின் ஆட்சி ஆண்டுக் குறிப்பு இல்லை. இப்பெயர்கள் கிரேக்கத் தாக்கம் கொண்டு உள்ளன. ‘S’ ஈறைத் தவிர்த்தால் இது விளங்கும்.
இனி, ஒப்பாய்வில் தெளியப் பெற்ற இந்த மன்னர் பெயர்கள் தமிழே என்ற கருத்து அறிஞர் முடிவுக்கு விடப்படுகின்றது.
பின் குறிப்பு:
1. இதில் எடுத்தாளப்பட்டுள்ள தமிழ்பிராமி கல்வெட்டுக் குறிப்பு பார்வை நூல் – ‘தமிழ்-பிராமி கல்வெட்டுகள், 2006, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு.
2. தமிழ் மன்னர் பெயர்களை அறிய உதவும் வலைத் தள முகவரி:
http://kallarperavai.weebly.com/2986297530212975296930212965299530072985302129973007299230072997300629653021296529903021.html
தலைப்பு: பட்டங்களின் விரிவாக்கம் – by International Kallar peravai.
3. மேல் உள்ள மன்னர் பெயர்களைப் பிரித்துப் படித்தறிய எனக்கு பெரிதும் உதவியாக இருந்தது பேரா. இரா. மதிவாணன் எழுதி வெளியிட்ட ஆங்கில நூல் Indian script Dravidian,1995. அவரிடம் சிந்து எழுத்துகளை படித்தறிவதற்கு பயிற்சி பெற்றவன் என்பதால் நான் அவருக்கு என்றென்றும் நன்றி உடையேன் ஆவேன்.
4. மேல் உள்ள மன்னர்கள் பெயர்களுடன் ஒத்துள்ள சில சிந்து முத்திரைகளை நான் படித்து படம் ஒட்டி உள்ளேன்.
சிறு கோடு – அ ஒலி, சக்கரம் – ண் ஒலி, செவ்வகம் – ட ஒலி, செவ்வகத்துள் ஐந்து கோடுகள் – ய ஒலி, செவ்வகத்தின் மேல் ஒரு கோடு – ன் ஒலி, ஆங்கில U வடிவில் இரு முனையிலும் சூலம் – கு ஒலி, நாமம் – ன்க ஒலி, செவ்வகம் – ட ஒலி, செவ்வகத்தின் உள்ளே கீழே ஐந்து கோடுகள் – ய் ஒலி, மேலே ஐந்து கோடுகள் – ய ஒலி. இதில் உள்ள ஒலிகள் அண்டயன் குன்க டய்ய என்பது. அண்டயன் என்பதில் யகர மெய் சேர்க்க வேண்டும். டய்ய முன் அகரம் இட வேண்டும். பின் அதை அண்ட(ய்)யன் குங்க(ன்) (அட்)டய்ய(ன்) என செப்பமாகப் படிக்கலாம்.
M1319 ஏற்றத்தின் நுனியில் பளு கல் போன்ற வடிவு – எ ஒலி, முனையில் கோடுடன் வாய் பிளந்த கிடுக்கி – வி ஒலி, ஒரு சிறு கோடு – அ ஒலி, ஆற்றின் ஓட்டம் போல் நான்கு கோடுகள் – ற ஒலி, நண்டு போன்ற உரு – ண ஒலி, இதில் உள்ள ஒலிகள் எவி அறண என்பது. இதை எ(வ்)வி அறணன் என மெய் எழுத்து கூட்டி படிக்க வேண்டும்.
U வடிவில் இருபுறமும் கோடு – கா, U வடிவில் இரு முனையிலும் கவடு – கூ , பறவை படம் – ழ், இரு பக்கமும் கீழ் நோக்காக கோடுகள் கொண்ட மீன் – சா, மீன் உள் ஒரு சிறு கோடு – ண், U வடிவில் இருபுறம் கோட்டுடன் மேலே இரு கோடுகள்- கோ, ஆங்கில H வடிவம் – ன, ll – ன். கா கூழ் சாண் கோனன் > கா கூழ(ன்) சாண(ன்) கோன(ன்) என அன் ஈறு சேர்த்து படிக்க வேண்டும்.
இது மேலை ஆசியாவில் கிட்டிய ஊர் முத்திரை. இரு கவடு உள்ள தேளின் முன்கால் – பூ ஒலி, தேள் முதுகில் ஐந்து கோடுகள் – ய ஒலி, வாலில் ஆள் உரு – அ ஒலி, கொடுக்கு முனையில் கண் – ன் ஒலி. இதில் உள்ள ஒலிகள் பூய்அன் என்பது. இதை பூயன் என படிக்க வேணடும்.

இந்த வட்ட முத்திரை மெசொபெட்டோமியா ஊர் எனும் இடத்தில் கண்டெடுக்கப்பட்டது. கீழ் கோடு வலிக்கப்பட்ட நான்கு கோடுகள் – நா ஒலி, கண் உரு – ண ஒலி, சிறு மேல் கோடு – அ ஒலி, தொட்டில் போன்ற உருவில் பறவை – ள ஒலி, இரு கோடுகள் – ன் ஒலி. இதில் உள்ள ஒலிகள் நாண அளன் என்பது. இதை நாண அ(ள்)ளன் என ளகர மெய் இட்டு படிக்கலாம்.

பண்டு தமிழர் எழுதும் முறையில் சொல் முன் வரும் உயிர் எழுத்துகளை (அ,இ) எழுதாமல் விட்டுவிடுவது. ஒற்றெழுத்துகளை எழுதாமல் விடுப்பது, அன் ஈறு இடாமல், ஈற்றில் ‘ன்’ மெய் இடாமல் எழுதுவது ஆகியன தமிழ் பிராமி, சிந்து எழுத்துகள் இரண்டனுக்கும் பொதுவான வழக்காய் இருந்தன என்பது மேலே சாய்வு எழுத்தில் காட்டப்பட்டுள்ள தமிழி கல்வெட்டு குறிப்பையும், என் சிந்து முத்திரை வாசிப்பையும் ஒப்பிட்டு அறியலாம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக