செவ்வாய், 14 டிசம்பர், 2010

பிராமி எழுத்து முறையிலிருந்து சிங்கள, திபேத்திய, பர்மிய, தாய் எழுத்துகளோடு, தமிழ் உள்ளிட்ட பெரும்பான்மையான இந்திய மொழிகளின் எழுத்துகள் தோன்றியது போல 
எனச் சொல்லும் பொழுதே பேராசியர் அறிந்ததை மறைத்தோ அறியாமையாலோ சொல்கிறார் என்பது புரிகின்றது. தமிழின் தூய்மை கெட்டதற்கு அறிஞர்கள் பலர் பல சான்றுகளை அளித்திருந்தும் ஆதாரம் இல்லை என நெஞ்சறிந்த பொய் ஏன் என்றும் புரியவில்லை. நல்ல ஆராய்ச்சி அறிஞர் ஏன் தடம்புரள்கிறார் என்று தெரியவில்லை. மதிப்பிற்குரிய பெரியண்ணன் அவர்களும் செல்வா அவர்களும் மறுத்தமைக்குப் பாராட்டுகள். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்.

பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 13

E.Annamalaiபேராசிரியர் இ.அண்ணாமலை, தமிழ் மொழியியல் சார்ந்த கேள்விகளுக்குத் தொடர்ந்து பதில் அளிக்கிறார். இதோ அடுத்த பகுதி:
கணேசனின் கேள்வி:
கிரந்த எழுத்துகளை ஒருங்குறியில் (Unicode) சேர்ப்பது பற்றி அரசு தலையிடும் அளவுக்குச் சர்ச்சை எழுந்துள்ளது. இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்:
பிராமி எழுத்து முறையிலிருந்து சிங்கள, திபேத்திய, பர்மிய, தாய் எழுத்துகளோடு, தமிழ் உள்ளிட்ட பெரும்பான்மையான இந்திய மொழிகளின் எழுத்துகள் தோன்றியது போல கிரந்த எழுத்துகளும் தோன்றின. தமிழ்நாட்டில் இடைக்காலத்தில் சமஸ்கிருதத்தை எழுதவும் சமஸ்கிருதம் மிகைபடக் கலந்த மணிப்பிரவாளத் தமிழ் நடையை எழுதவும் கிரந்த எழுத்துகள் பயன்பட்டன. இன்று தமிழில் ஆங்கிலச் சொற்களைக் கலந்து எழுதும் (இது கடன் சொற்களைச் சேர்த்து எழுதுவதிலிருந்து வேறுபட்டது) சிலர் அந்தச் சொற்களை ஆங்கில எழுத்துகளிலேயே எழுதுவது போன்றது இந்தப் பழக்கம்). தமிழ்க் கல்வெட்டு ஆவணங்களிலும் கிரந்த எழுத்துகளை மிகுதியாகப் பார்க்கலாம்.
தமிழ் இலக்கியத்தில், தொல்காப்பியரும் பின்வந்த இலக்கண ஆசிரியர்களும் சமஸ்கிருதத்திலிருந்து கடன் பெற்ற சொற்களைத் தமிழில் தமிழ் எழுத்துகளைக் கொண்டே எழுத விதித்த நெறிமுறையைப் பின்பற்றி, பதினெட்டாம் நூற்றாண்டு வரை, கிரந்த எழுத்துகள் இடம் பெறவில்லை. பின்னால் ஐந்து கிரந்த எழுத்துகள் (ஜ, ஸ, ஷ, ஹ, க்ஷ) தமிழ் அரிச்சுவடியின் விரிவாக இடம் பெற்றன. கவிதை உட்பட இன்றைய நவீனத் தமிழ் இலக்கியத்தில் இந்தக் கிரந்த எழுத்துகள் தயக்கமின்றிப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த எழுத்துகள் பல, தமிழர்களின் பெயர்களில் உள்ளன, முன்னாள், வருநாள் முதல் அமைச்சர்களின் பெயர்கள் உட்பட. தமிழ்ச் சொற்களிலும் தமிழர் பெயர்களிலும் இடம் பெற்றுள்ள இந்த ஐந்து கிரந்த எழுத்துகளுக்கும் (இன்னும் இரண்டு குறியீடுகளுக்கும்), பழைய தமிழ் எண்களைப் போலவே, ஒருங்குறியில் தமிழுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில், தமிழ் எழுத்துகளின் குறியீட்டு எண்களின் (code points) தொடர்ச்சியாக, இடம் தரப்பட்டிருக்கிறது. இந்த ஏற்பாடு தொடர்ந்து இருக்கும்; இருப்பது தேவை.
ஒருங்குறி, உலக மொழிகள் எல்லாவற்றின் எழுத்துகளுக்கும் இடம் தருகிறது. உலக வழக்கிலிருந்து போய்விட்ட எழுத்துமுறைகளுக்கும் இடம் தருகிறது. ஏனென்றால் அந்த எழுத்துகளில் எழுதப்பட்ட ஆவணங்கள் ஆய்வுலகிற்கு முக்கியம். அந்த முறையில் கிரந்த எழுத்துகளுக்கும் தேவை உள்ளது. அதை ஏற்று, இந்திய அரசு ஒருங்குறி ஆணையத்திற்கு எழுதியிருக்கிறது. தமிழைப் பொறுத்த வரை, மணிப்பிரவாள நடையில் உள்ள வைணவ உரைகளையும் பல கல்வெட்டு ஆவணங்களையும் எண்வயமாக்கி (digitize) ஆய்வுக்குப் பயன்படுத்த இந்த முடிவு உதவும். இதிலும் சர்ச்சை இருக்க முடியாது.
சர்ச்சை கிளம்பியிருப்பது கிரந்த எழுத்துக்களைப் பற்றி, உலகளாவிய ஒருங்குறி ஆணையத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ள புதிய வரைவுத் திட்டத்தைப் பற்றித்தான். இதை எழுதி அனுப்பியிருப்பவர் டாக்டர் ஸ்ரீரமண சர்மா என்பவர். இவர் காஞ்சி சங்கர மடத்தோடு தொடர்புடையவர் என்று சொல்லப்படுகிறது. இந்த வரைவுத் திட்டம் தனிப்பட்ட முறையில் அனுப்பப்பட்டதா, அல்லது ஒரு நிறுவனத்தின் சார்பில் அனுப்பப்பட்டதா என்று எனக்குத் தெரியவில்லை. இந்த வரைவுத் திட்டத்தை http://www.tamilnet.com/img/publish/2010/11/20100710-extended-tamil-proposal.pdf என்ற பக்கத்தில் பார்க்கலாம். இது, சமஸ்கிருதத்தைத் தமிழ் எழுத்துகளில் எழுத உதவும் பொருட்டுத் தயாரிக்கப்பட்டது. தமிழ் எழுத்துகளில் வடிக்க முடியாத சமஸ்கிருத ஒலிகள் உண்டு என்பது பலரும் அறிந்த உண்மை. அவற்றில் வல்லினத்தின் வர்க்க எழுத்துகளும், உயிர்ப்பொலி ஏறிய (vocalic) ரகர, லகரமும் அடங்கும். சமஸ்கிருத எழுத்துகளில் – அதாவது தேவநாகரி எழுத்து முறையில் – வடிக்க முடியாத தமிழ் ஒலிகளும் உண்டு. அவை எ, ஒ, ழ, ற, ன.
இந்த ஐந்து எழுத்து வடிவங்களையும் கிரந்த எழுத்துகளோடு சேர்க்கும்படி சர்மா பரிந்துரைத்திருக்கிறார், அப்படிச் சேர்ப்பது தமிழுக்கு ஆபத்து என்பதே சர்ச்சையின் சாராம்சம். இணைப்பில் உள்ள அவருடைய வரைவுத் திட்டத்தில் இந்தப் பரிந்துரை இல்லை. மேலே சொன்ன கிரந்த எழுத்துகளுக்கு ஒருங்குறியில் தனி இடமும் குறியீட்டு எண்ணும் தர வேண்டும் என்ற இந்திய அரசின் பரிந்துரையின் திருத்தமாக, கிரந்த எழுத்துகளோடு மேலே சொன்ன ஐந்து தமிழ் எழுத்துகளையும் சேர்க்க வேண்டும் என்று அவர் வேறு இடத்தில் சொல்லியிருக்கலாம்; அல்லது வேறு யாராவது சொல்லியிருக்கலாம். அது பற்றி எனக்குத் தெரியவில்லை.
தமிழைக் கிரந்த எழுத்துகளில் எழுதுவதற்கு இந்தப் பரிந்துரை உதவும்; சமஸ்கிருதத்தைத் தமிழ் எழுத்துகளில் எழுத, இந்தப் பரிந்துரை தேவை இல்லை. ஏனென்றால், சமஸ்கிருதத்தில் இந்த எழுத்துகள் குறிக்கும் ஐந்து ஒலிகளும் இல்லை. இந்தப் பரிந்துரை எதற்கு என்ற கேள்வி எழுகிறது. அதைப் பார்க்காமல் ஊகமாகத்தான் பதில் சொல்ல முடியும். தமிழைக் கிரந்த எழுத்துகளில் எழுத, எந்த நடைமுறைத் தேவையும் இல்லை. இந்திய மொழிகள் எல்லாவற்றுக்கும் பொதுவாக ஒரு வரிவடிவத்தை உருவாக்க வேண்டுமென்றால் ஒவ்வொரு மொழிக்கும் உரிய தனி ஒலிகளுக்கான எழுத்துகள் பொது வரிவடிவில் இடம் பெற வேண்டும். தமிழில் தனி ஒலிகளுக்கான எழுத்துகள் மட்டும் இடம் பெற்றால் போதாது. மேலும், பொது வரிவடிவுக்குச் சிலர் தேவநாகரி எழுத்துமுறையையும் சிலர் ரோமன் எழுத்துமுறையையும் அவ்வப்போது பரிந்துரைத்திருக்கிறார்கள். அவையே ஏற்றுக்கொள்ளப்படாமல் இருக்கும்போது, கிரந்த எழுத்துமுறையில் அமைந்த பொது வரிவடிவம், தேவை இல்லாத ஒன்று. இதைத் தேவையற்றது என்ற அடிப்படையிலேயே ஒருங்குறி ஆணையம் ஏற்றுக்கொள்ளாது என்று நினைக்கிறேன். தமிழை அழிக்கும் சதி என்றெல்லாம்  குரலெழுப்பத் தேவை இல்லை.
ஒருங்குறி ஆணையத்திற்குச் சர்மா அனுப்பியுள்ள வரைவுத் திட்டம், ஒருங்குறியில் தமிழ்ப் பகுதியில் சில கிரந்த எழுத்துகளை விரிவாக்கிய தமிழ் (Extended Tamil) என்று சேர்ப்பதன் அவசியத்தையும் கிரந்த எழுத்துகளை எப்படி வடிவமைக்கலாம் என்பது பற்றியும் பேசுகிறது. நடைமுறைப் பிரச்சினை சார்ந்த இரண்டாவதைப் பற்றி இங்கே நான் பேசவில்லை. எழுத்து வடிவின் அழகு, எழுதும் எளிமை முதலான எண்ணங்களின் அடிப்படையில் எது உகந்தது என்று தனியே எழுதப்பட வேண்டியது அது. முதலாவது கொள்கை சார்ந்தது; நோக்கம் சார்ந்தது. கிரந்த எழுத்துகளின் அவசியத்திற்குச் சர்மா இரண்டு காரணங்கள் தருகிறார். ஒன்று, சமஸ்கிருதத்தைத் தமிழ் எழுத்துகளில் எழுத, கிரந்த எழுத்துகள் வேண்டும். உயர் சாதிகளில் நாமகரணம் போன்ற சடங்குகளில் சமஸ்கிருத சுலோகங்களைத் தமிழ் எழுத்துகளில் எழுதிப் படிக்கும் பழக்கம் இன்னும் இருக்கிறது. சமஸ்கிருதம், இந்தி முதலான மொழிகளைத் தமிழ் எழுத்திலேயே படிக்கும் முறையும் இருக்கிறது.
இரண்டு, தமிழ்நாட்டில் வழங்கும் சௌராஷ்டிரம் போன்ற மொழிகளுக்குத் தமிழ் எழுத்துகளோடு கிரந்த எழுத்துகளைச் சேர்த்து ஒரு எழுத்துமுறை உருவாக்கலாம். ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை எழுத வழங்கும் ரோமன், தேவநாகரி ஆகிய எழுத்துமுறைகளுக்கு ஒருங்குறியில் விரிவாக்கப்பட்ட எழுத்துகள் உண்டு.
சர்மா சொல்லவில்லை என்றாலும், தமிழ் எழுத்துமுறையின் அடிப்படையில் தமிழ்நாட்டில் வழங்கும் பழங்குடி மொழிகளுக்கும் பிற மொழிகளுக்கும் எழுத்துமுறை அமைக்கும்போது கிரந்த எழுத்துகள் தேவைப்படும். தமிழ்நாட்டில் பேசும் மொழிகளைத் தமிழ் எழுத்துமுறையை ஒட்டி எழுதுவதைத் தமிழர்கள் ஒப்புக்கொள்வார்கள். அந்த மொழிகளை தேவநாகரி, ரோமன் எழுத்துமுறைகளில் எழுதுவதை விட, தமிழ் எழுத்துமுறையில் எழுதுவதைத் தமிழர்கள் விரும்புவார்கள். இந்தத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமானால் தமிழ் எழுத்துகளோடு சில கிரந்த எழுத்துகளைச் சேர்க்க வேண்டும். தமிழின் தூய்மையைக் காப்பதும் தமிழ் எழுத்துமுறையைப் பரப்புவதும் ஒருசேர நடக்க முடியாது.
கிரந்த எழுத்துகளால் தமிழுக்கு ஆபத்து என்ற வாதம் ஏன் முன்வைக்கப்படுகிறது? கிரந்த எழுத்துகள், தமிழர்கள் சமஸ்கிருதத்திலிருந்தும் பிற மொழிகளிலிருந்தும் சொற்களைக் கடன் வாங்குவதை ஊக்குவிக்கும்; தமிழின் தூய்மை கெடும் என்பது ஒரு வாதம். இந்த பயத்திற்கு ஆதாரம் இல்லை. எழுத வசதி இருக்கிறது என்பதால் எந்த மொழியும் அதிகமாகச் சொற்களைக் கடன் வாங்குவதில்லை. ஒரு மொழி பேசுபவர்கள் பிற மொழிகளிலிருந்து சொற்களைக் கடன் வாங்குவதற்கு கலாச்சார – அரசியல் அதிகாரம், சமூக மாற்றத்தின் தேவைகள், புதிய சிந்தனைகள், பொருள்கள் முதலான பல காரணங்கள் இருக்கின்றன. எழுதும் வசதி, அவற்றில் ஒன்று அல்ல.
தமிழில் உள்ள சொற்களையே கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்தி எழுதுவது அதிகமாகும் என்பது மற்றொரு வாதம். பள்ளி ஆசிரியர், இதழாசிரியர், பதிப்பாளர் போன்ற தமிழை மேலாண்மை செய்வோரின் இடையீடு இல்லாமல், இணையத்தளம், வலைப்பூ போன்ற புதிய ஊடகங்களில் தமிழர்கள் எழுதும்போது பாயஸம், ஸன் டிவி என்று எழுதுவதைப் பார்க்கலாம். புதிய கிரந்த எழுத்துகள் ஒரு சொடுக்கில் கிடைத்தால், அவை தமிழ்ச் சொற்களில் வருவது அதிகமாகலாம். இது ப்ரியம், பத்ரிக்கை என்று இரண்டு மெய்யெழுத்துகளை இடையில் உயிரெழுத்து இல்லாமல் எழுதுவது போன்றது; இதற்கும் கிரந்த எழுத்து கைக்குக் கிடைப்பதற்கும் சம்பந்தம் இல்லை. இப்படி எழுதுவது தமிழைப் பற்றிய ஒரு மனநிலை; மரபை மீறும் மனநிலை. கல்லூரியில் படிக்கும் மகள், பையன்களோடு கைபேசியில் பேசுகிறாள் என்று அந்தச் சாதனத்தைக் கைக்குக் கிடைக்காமல் செய்தால், மனநிலை மாறப் போவதில்லை. தமிழ் தன் சனாதனத்தைக் கொஞ்சம் விட்டுக் கொடுத்து, மரபை நெகிழ்ச்சியாக்கி, அதன் ஈர்ப்புத்தன்மையைக் கூட்ட வேண்டும்.
ஒருங்குறியில் கிரந்த எழுத்துகளைச் சேர்ப்பதைத் தடுத்துவிட்டாலும், தமிழ்ச் சொற்களில் கிரந்த எழுத்துகளைச் சேர்ப்பதைத் தடுக்க முடியாது. ஒருங்குறியில் தனிப் பகுதியில் கிரந்த எழுத்து இருக்கப் போகிறது. தமிழ், ஆங்கில எழுத்துகளைப் போல, தமிழ், கிரந்த எழுத்துகளை ஒருத்தி தன் கணினியில் இறக்கிவைத்துக்கொண்டால், கிரந்த எழுத்துகளை வேண்டும்போது விசைப் பலகையை மாற்றும் சொடுக்கை உபயோகித்து எழுதலாம். தொழில்நுட்பம் மொழியின் மீது சமூகம் செலுத்தும் கட்டுப்பாட்டில் கீறல் ஏற்படுத்துகிறது. இது உலக நியதி.
தமிழின் முன் உள்ள ஒரு முக்கியமான கேள்வி இது. இலங்கைத் தமிழர்களையும் சேர்த்து, இன்று தமிழர்கள் உலகின் பல நாடுகளில் வாழ்கிறார்கள். அங்குள்ள சுற்றுச்சூழலில் உள்ளவற்றையும் உள்ளவர்களையும் அங்குள்ள வாழ்க்கை அனுபவங்களையும் தமிழில் தரத் தமிழ் எழுத்துமுறைக்கு நெகிழ்ச்சி தேவைப்படுகிறது. வெளிநாடுகளில் பிறந்து வளரும் இரண்டாம் தலைமுறைத் தமிழ்ப் பிள்ளைகளுக்குத் தமிழ் மீது நம்பிக்கை வர வேண்டுமென்றால் இந்த நெகிழ்ச்சி மிகவும் தேவை. இல்லையென்றால், அவர்களுடைய வாழ்க்கைக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பு நைந்துபோகும். தமிழ்நாட்டிலேயே தமிழர்களுக்கு பொருளாதாரக் காரணங்களால் உலகத் தொடர்பு கூடக் கூட, அந்த வாழ்க்கை முறைக்குத் தமிழைப் பொருத்தத் தமிழுக்கு நெகிழ்ச்சி தேவைப்படும்.
தமிழ் எழுத்துக்கும் உச்சரிப்புக்கும் இடையே வேறுபாடு கூடிவருகிறது. பேச்சுத் தமிழுக்கும் எழுத்துத் தமிழுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை இங்கே கூறவில்லை. தமிழ்ச் சொற்களிலேயே – இவை கடன் சொற்கள் மட்டுமல்ல – வல்லெழுத்துகளில் ஒலிப்புள்ள (voiced) உச்சரிப்பு இருக்கிறது. குரு, தோசை, பூரி ஆகிய சொற்கள் சில உதாரணங்களே. இந்த உச்சரிப்பு, படித்தவர்களிடமிருந்து மற்றவர்களுக்கும் பரவியிருக்கிறது. இந்த மாதிரி புதிய உச்சரிப்புகளைத் தமிழை எழுதும் முறையில் காட்டப் புது வரிவடிவங்கள் தேவை. எப்படிக் காட்ட வேண்டும் என்பது வேறு கேள்வி. காட்ட வேண்டுமா என்ற கேள்வியை ஒருங்குறியில் கிரந்த எழுத்துகள் பற்றிய சர்ச்சையில் எழுப்பி விவாதித்தால் அது தமிழுக்கு நல்லது. இந்த விவாதத்தைத் தமிழைப் பாதுகாக்கும் அரசியல் விவாதமாக ஆக்காமல், தமிழின் வன்மையைப் பெருக்கும் அறிவு விவாதமாக மாற்றினால், அது உலகமயமான அறிவுச் சமுதாயத்தின் புதிய சவால்களைச் சமாளிக்கத் தமிழ் தன்னைத் தயார்ப்படுத்திக்கொள்ள உதவும்.
இந்தச் சர்ச்சை இன்னொன்றையும் வெளிக்கொணருகிறது. தமிழ் வளரும் பாதை, அரசிடமிருந்தும் பழைய சமூக நிறுவனங்களிலிருந்தும் விலகி, தமிழ்ச் சமூகத்திற்கு அப்பால் இயங்கும் தொழில்நுட்பம், அவற்றைக் கையாளும் உலகம் சார்ந்த நிறுவனங்கள் ஆகியவற்றின் பாதையில் சேரும் போக்கு தோன்றியிருக்கிறது.
===============================================
(தமிழ் மொழியியல் தொடர்பான உங்கள் கேள்விகள், ஐயங்கள் ஆகியவற்றை vallamaieditor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள். பேராசிரியர் தொடர்ந்து பதில் அளிப்பார். பேராசிரியரின் பதில்கள், சிந்தனையைத் தெளிவிக்கவும் மேலும் சிந்திக்கவும் தூண்டும் ஒரு முனையே. அதிலிருந்து தொடர்ந்து நாம் பயணிக்கலாம். அவரின் பதில்களுக்குக் கருத்துரை எழுதலாம். பதில்களின் அடிப்படையில் புதிய கேள்விகள் கேட்கலாம். நம் தேடலைக் கூர்மைப்படுத்த இது நல்ல தருணம்.)
Popularity: 3% [?]
Tags: 
Subscribe to Comments RSS Feed in this post

2 Responses

  1. அண்ணாமலை சொல்கிறார்: “வெளிநாடுகளில் பிறந்து வளரும் இரண்டாம் தலைமுறைத் தமிழ்ப் பிள்ளைகளுக்குத் தமிழ் மீது நம்பிக்கை வர வேண்டுமென்றால் இந்த நெகிழ்ச்சி மிகவும் தேவை. இல்லையென்றால், அவர்களுடைய வாழ்க்கைக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பு நைந்துபோகும்.”
    இதற்கு எந்த அடிப்படையும் இல்லை. யான் 22 ஆண்டுகள் அமெரிக்காவில் வாழ்கிறேன். என்னவோ இதுவரை இந்த அயல்நாட்டுப் பிள்ளைகள் இன்றைய எழுத்துகள் அனுமதிக்கும் வரம்புவரை மலை மலையாகத் தமிழ்மொழியில் எழுதிக் குவித்திருப்பதாகவும், இன்னும் நுணுக்கமாகத் தங்கள் அயல்நாட்டுச் சூழலைத் தெரிவிக்க இந்தச் சில கூடுதல் ஒலிகளைக் குறிக்கும் எழுத்துகள் கிட்டாததால் அவர்கள் தமிழ்மொழியில் இனிமேல் குவிக்கும் படைப்புகள் உடனே குன்றிப் போகும் நிலை இருப்பதாகவும் ஒரு மாயத் தேவையைத் தோற்றுவிக்கிறார். தமிழ் மொழிக்கு அப்படி ஒரு நெருக்கடி ஏற்படும் அளவு ஒன்றும் அடுத்த தலைமுறைக் குழந்தைகளுக்குத் தமிழில் பயிற்சியில்லை. பெற்றவர்களுக்கும் அக்கறையில்லை. கடவுளைப் போற்றும் வடமொழிச் செய்யுள்களைத் தப்பும் தவறுமாகப் பாடக் காட்டும் அக்கறைகூட இதில் இல்லை. வீட்டுப் பேச்சையே பிள்ளைகள் பலர் ஊமைகள் போல் பேசுகிறார்கள். அவர்களுக்கு இன்றைய எழுத்துகள் கொண்டு என்ன எழுத முடியுமோ அதை எழுதக் கோடியிலொரு பங்கும் திறமையில்லை. எனவே திரு.அண்ணாமலை இப்படி ஒரு மாயைப் பேச்சுப் பேச அடிப்படையில்லை. இவர் தாம் நினைக்கும் ஆய்வக நோக்கத்திற்காக மொழியில் விளையாட நினைக்கிறார். மேலும் சமுதாயப் பிடியில் தமிழ் மொழி சிக்கியிருப்பதாகப் பேசுவதும் உண்மையில்லை.
    - பெரியண்ணன் சந்திரசேகரன். அற்றலான்றா
  2. பேராசிரியர் அவர்களுடைய பல கருத்துகளுக்குத் தக்க சான்றுகளோ பின்புலமோ இருப்பதாகத் தெரியவில்லை.
    எடுத்துக்காட்டாக,
    //கிரந்த எழுத்துகளால் தமிழுக்கு ஆபத்து என்ற வாதம் ஏன் முன்வைக்கப்படுகிறது? கிரந்த எழுத்துகள், தமிழர்கள் சமஸ்கிருதத்திலிருந்தும் பிற மொழிகளிலிருந்தும் சொற்களைக் கடன் வாங்குவதை ஊக்குவிக்கும்; தமிழின் தூய்மை கெடும் என்பது ஒரு வாதம். இந்த பயத்திற்கு ஆதாரம் இல்லை. எழுத வசதி இருக்கிறது என்பதால் எந்த மொழியும் அதிகமாகச் சொற்களைக் கடன் வாங்குவதில்லை.//
    இதற்கு ஏதேனும் அடிப்படை உள்ளதா? ( இந்த பயத்திற்கு ஆதாரம் இல்லை. எழுத வசதி இருக்கிறது என்பதால் எந்த மொழியும் அதிகமாகச் சொற்களைக் கடன் வாங்குவதில்லை). எஞ்சின் என்று கடன்வாங்கி எழுத வசதி இருக்கும் பொழுதே வேண்டுமென்றே என்ஜின் என்று எழுதுகின்றன சில புகழ்பெற்ற ஊடகங்கள். கட்டுரையில் பொறியியல் என்று பல முறை எழுதும் ஊடகம் வேண்டுமென்றே இன்ஜினீயரிங் (இஞ்சினீரிங் கூட இல்லை).
    பஞ்சு என்னும் தமிழ்ச்சொல்லை பன்ஜு என்றும் காட்சி என்னும் தமிழ்ச்சொல்லைக் காக்ஷி என்றும் வலிந்து எழுதும் மக்களும் உள்ளனர். எடுத்துக் கூறினாலும் வேண்டுமென்றே கிரந்தம் கலந்தே கலந்து எழுதுகின்றனர்.
    இவை எழுத்துப்பிழை இல்லை என்பதைப் பல கோணங்களில்
    நிறுவ முடியும்.
    உலகத்தில் உள்ள அத்தனை மொழியையும்,, மொழி நுணுக்கங்களையும் தமிழ் எழுத்தின் அடிப்படையாக எழுதி
    அலச வேண்டும் என்று எண்ணுபவன் நான். ஆனால் இதற்காகத் தமிழின் நெடுங்கணக்கை மாற்ற வேண்டும் என்பது அறிவுடைமை ஆகாது என்று கூறுவேன்.
    பல கருத்துகளோடு ஒப்ப முடியவில்லை!!
  3. Your comment is awaiting moderation.
    <> எனச் சொல்லும் பொழுதே பேராசியர் அறிந்ததை மறைத்தோ அறியாமையாலோ சொல்கிறார் என்பது புரிகின்றது. தமிழின் தூய்மை கெட்டதற்கு அறிஞர்கள் பலர் பல சான்றுகளை அளித்திருந்தும் ஆதாரம் இல்லை என நெஞ்சறிந்த பொய் ஏன் என்றும் புரியவில்லை. நல்ல ஆராய்ச்சி அறிஞர் ஏன் தடம்புரள்கிறார் என்று தெரியவில்லை. மதிப்பிற்குரிய பெரியண்ணன் அவர்களும் செல்வா அவர்களும் மறுத்தமைக்குப் பாராட்டுகள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக